April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கையின் இராஜதந்திரக் களம்; இலங்கை-இந்தியா கூட்டுக் கடற்படைப் பயிற்சியும் மைக் பாம்பியோவின் வருகையும்

இலங்கை-இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையிலான உறவினை சீனா தீர்மானித்துவிடக் கூடாது என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் கரிசனை கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் எழுந்துள்ள முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசியல் பரப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. எதிர்வரும் வாரத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ வருகை தரவுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். ஆனாலும் இலங்கைத்தரப்பு அதனை எல்லாம் கையாளும் நோக்கில் சில முன்னாயத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவை இந்தியாவுக்கூடாக கையாள முடியும் என்ற எண்ணத்துடன் செயல்பட முயலும் இலங்கை இந்தியாவுடனான நெருக்கத்தினை வெற்றிகரமாக நகர்த்த திட்டமிடுகிறது. இந்தியாவும் இத்தகைய சந்தர்ப்பத்திற்கூடாக இலங்கையுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்வதன் மூலம் சீன-இலங்கை நெருக்கத்தை தவிர்க்கலாம் என திட்டமிடுகிறது. இக்கட்டுரையும் கடந்த வாரத்தின் பதிவுகளின் வளர்ச்சியாக அமைகிறது.

19.10.2020 முதல் மூன்று நாட்களுக்கு இலங்கை-இந்திய கடற்படைக் கூட்டுப் பயிற்சி (SLINEX) திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஆரம்பமாகி நிகழ்ந்துள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் ஐ.என்.எஸ் கமோத்தா மற்றும் ஐ.எஸ்.என் கில்டன் ஆகிய போர்க் கப்பல்கள் கலந்து கொண்டன. மேலும் இந்திய நவீன போர்க்கப்பல்களில் இருந்து நவீன இலகுரக ஹெலிகொப்டர்கள் கடற்படையின் டோர்னியா ரோந்து விமானங்கள் ஆகியவை கலந்து கொண்டன. இலங்கையின் சார்பில் எஸ்.எல்.என் சயூரா எனும் ரோந்துக் கப்பலும் மற்றும் கஜபாகு எனும் பயிற்சிக்கப்பலும் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த கூட்டுப்பயிற்சியானது இரு நாட்டுக்குமான நெருக்கத்தினை அதிகரித்துள்ளதாகவும் ஆழமான ஈடுபாட்டையும் கடல்சார் களத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பினை ஏற்படுத்துமளவுக்கு வலிமையானது என இந்திய கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது சமீபத்திய ஆண்டுகளில் இரு கடற்படைகளுக்கும் இடையிலான தொடர்புகள் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன எனவும் இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சகார் (SAGAR) பிரகடனத்தின் கீழ் உருவானது எனவும் அயல்நாடுகளுடான நெருக்கத்தினை ஏற்படுத்தும் பிரதமரது பார்வை எனவும் குறிப்பிட்டார். இரு நாட்டுக்குமான மூலோபாய நனலன்கள் சார் ஒத்துழைப்பினையும் பிராந்தியம் சார் ஒத்துழைப்பினையும் ஏறட்படுத்துவதே பிரதான நோக்கம் என இரு நாட்டுக் கடற்படையின் அதிகாரிகள் தெரிவித்தன. இதில் இரண்டு போர் உத்திகள் பிரயோகிக்கப்பட்டதாக அவ்வதிகாரிகள் குறிப்பிட்டனர். அதாவது விமான எதிர்ப்பினையும் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கு எதிரான போர் உத்திகளையும் அதிகம் மையப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது. அத்துடன் கரையோர ரோந்து நகர்வுகளும் முதன்மைப்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இத்தகைய கடல்படைகளுக்கிடையிலான கூட்டுப் பயிற்சியின் ஊடாக இலங்கை இந்திய உறவை பலப்படுத்துவதுடன் கடல் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் வைத்துக் கொள்ள இந்தியத் தரப்பு முயலுகிறதென்பது தெளிவாக தெரிகிறது. அதனையே இலங்கையும் பயன்படுத்திக் கொள்ளும் உத்திகளை பிரயோகப்படுத்திவருகிறது. போர் அற்ற சூழலில் இலங்கை இந்தியாவுடன் இணைந்து SLINEX எட்டாவது தடவையாக மேற்கொண்டு வருகிறது. ஒன்பதாவது கூட்டுப் பயிற்சி திருவனந்த புரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறே தரைப்படைகளுடனான கூட்டுப் பயிற்சியிலும் ஏழு தடவை இரு நாடுகளும் நிகழ்த்தியுள்ளன. அவ்வாறே இந்நியத் தரப்பு இலங்கைக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்யும் செய்முறையிலும் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான உரையாடல்களை இரு தரப்பு பாதுகாப்பு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கூடாக இலங்கைத் தரப்புடன் நெருக்கமமைடவதுடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எல்லைக்குள் சீனாவின் பிரசன்னத்தை தவிர்ப்பதாகவே உள்ளது. அதற்கு ஆதாரமாக இந்தியா இந்தோ-பசுபிக் நாடுகளுடனான கூட்டு பயிற்சியைக் குறிப்பிட முடியும்.

இதேநேரம் இந்தியா கடந்த செப்ரெம்பர் 26-28 வரை ஜப்பானிய கடற்படையுடன் இணைந்து மூன்று நாள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது. அவ்வாறே முடிந்த மாதத்தில் அவுஸ்ரேலியாவுடனும் அமெரிக்கக் கடற்படையுடனும் பாரிய போர் பயிற்சியில் ஈடுபட்டது.  அந்தமான்-நிக்கோபார் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தையும் மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இது சீனாவுக்கு எதிரான அணியின் வருகையை இந்துசமுத்திரத்தில் உறுதிப்படுத்திக் கொள்வதாகவே அமைந்துள்ளது. இதன் இன்னோர் நகர்வாகவே மைக் பாம்பியோவின் இலங்கை விஜயம் அமையவுள்ளது. குறிப்பாக 25. 10. 2020 முதல் 30.10.2020 வரையான காலப்பகுதியில் மைக்பாம்பியோ இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி வலுவான இறைமையுள்ள இலங்கையுடனான கூட்டுச் செயல்பாடு குறித்து அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்காகவே மைக்பாம்பியோவின் விஜயம் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்டக்ஸ் குறிப்பிடும் போது இந்த விஜயம் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியம் குறித்த இரு நாடுகளினதும் பொதுவான இலக்குகளில் முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு விஜயம் உதவும் எனத் தெரிவித்தார்.

எனவே இதில் சில தெளிவுகளை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செயல்படுவது போல் இலங்கையும் தனது இருப்பினை குறித்த நாடுகளுடன் ஒத்துழைப்பினை மேற்கொள்வதன் வாயிலாக பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முயலுகின்றதைக் காணமுடிகிறது. இதில் இந்தியாவுடனான உறவை முதன்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்காவுடனான உறவை சரிசெய்ய விரும்புகிறது. அதனாலேயே இந்தியாவுடன் இராணுவ விடயங்களில் அதிக ஒத்துழைப்பினை வழங்கிவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு பொறுத்தே இலங்கையுடன் முரண்பட முயலுகிறது என்ற குழப்பம் நீண்டகாலமாக நீடிகிறது. அதனால் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பினை மேற்கொண்டு ஏனைய வர்த்தகம் பொருளாதார ஒத்துழைப்பு நிதி உதவிகளுக்கானதுமான உட்கட்டமைப்புக்கானதுமான விடயங்களில் சீனாவுடனும் பிற நாடுகளுடனும் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தியாவை திருப்திப்படுத்தலாம் என இலங்கை கருதுகிறது. அதற்கு இந்தியாவும் ஒத்துழைக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது.

ஆனால் அமெரிக்காவின் நகர்வுகள் சற்று வேறு தளத்தில் ஆரம்பமாகியுள்ளது. வெளிப்படையாக இந்தோ-பசுபிக் பற்றிய உரையாடலை ஏற்படுத்தும் நிலை உலகளாவிய அரசியலில் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக சீனாவுடன் மோதிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அமெரிக்கா நகருகிறது. அதனால் அமெரிக்காவினது இலங்கை உறவு அதிக முக்கியத்துவம் பொருந்தியதாக தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே மைக்பாம்பியோவின் இலங்கை விஜயம் அமையவுள்ளது. இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் இலங்கையின் அவசியப்பாடு உணரப்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்தும் விதத்திலேயே பாம்பியோ இலங்கை வருகை தருகிறார். இலங்கை இல்லாத இந்தியா எப்படி நெருக்கடிக்குள்ளாகுமோ அவ்வாறே இலங்கை இல்லாத இந்தோ-பசுபிக் உபாயமும் அமையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இலங்கை இந்தோ-பசுபிக் கமட்டுப்பாட்டுக்குள் இல்லாது இருந்தாலும் பறவாயில்லை. இந்த அணியின் எதிரி நாடான சீனாவுடன் உறவு கொள்வதே அமெரிக்க-இந்தியக் கூட்டுக்கான நெருக்கடியாகும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முரண்பாடுகளை கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் ஹரிகரன் தெரிவித்துள்ளதுடன், ஜப்பான் அமெரிக்கா இந்தியா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு முரண்பாடாக இலங்கை செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை அத்தகைய விடயங்களை முரண்பாடாக கருதாது உத்தியாக கருதி நியாயப்பாடுகளை வெளிப்படுத்த முயலுகிறது. பொருளாதாரத் தேவைகளுக்காகவும் உட்கட்டுமான உதவிகளுக்காகவும் நன்கொடை மற்றும் கடன் பெறுகைக்காகவும் சீனாவுடன் செயல்படுகிறதென்பதை இலங்கை தெளிவாக உறுதிப்படுத்த முயலுகிறது. அதனால் முரண்பாடான வெளியுறவு என்பதை விட முரண்பாடான களத்தில் ஒரு வெளியுறவுக் கொள்கையை இலங்கை வகுத்து வருகிறது.

எனவே இந்தியாவுடனான கூட்டு கடல்படை பயிற்சியும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாமட்பியோவின் வருகையும் ஒரே தளத்தில் இலங்கையினால் கையாளப்படுகின்ற அரசியல் பரப்பாக அமைந்துள்ளது.

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்.-

(நன்றி: தினக்குரல்)