அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் புதிய உலக ஒழுங்குக்கான முனைப்பை ஏற்படுத்துமா?

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீளவும் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்டப் போர் நிறுத்த உடன்பாடு தோல்வி அடைந்ததை அடுத்து, மூன்றாம் கட்டப் போர் தொடங்கியுள்ளது. இப்போரின் தொடக்கம் ஏமனில் காணப்படும் ஹவுதி குழுக்களை அமெரிக்க விமானங்கள் மூலம் தாக்கியதில் இருந்து தொடங்கியது. ஒருபுறம் ஆயுத குழுவான ஹிஸ்புல்லாவின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் மீதான தாக்குதலையும் இஸ்ரேல் காசாவின் நிலப்பரப்பில் தொடங்கியது. போர் நிறுத்தம் அல்லது சமாதான முயற்சி என்பது போருக்கான தயாரிப்பு என்பதை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான தயாரிப்புகள் நிறைவு பெற்ற பிற்பாடு மீளவும் போர் தொடங்கியிருக்கின்றது. இந்தப் போரின் போக்கினையும் அதன் விளைவுகளையும் தேடுவது இக்கட்டுரையில் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

முதலாவது, ஹிஸ்புல்லா அமைப்பினரை அழித்து விட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்ட போதும், நடைமுறையில் இஸ்ரேல் நிலப்பரப்பு மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா நிகழ்த்தியுள்ளது. கிளர்ச்சி குழுக்கள் இஸ்ரேல் மீது பாரிய கொண்டு தாக்குதலை நிகழ்த்தியிருப்பதோடு, இஸ்ரேலியர் அச்சப்படும் அளவுக்கு அத்தாக்குதலின் பிரதிபலிப்பு அமைந்திருப்பதாக தெரிய வருகிறது. ஏறக்குறைய போரின் அடுத்த கட்ட நகர்வுகளை அமெரிக்கா தொடங்கியுள்ள போது, ஹமாஸ் போராளிகள் அதனை எதிர்கொள்வதில் அதிக நெருக்கடிகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். காரணம் மீண்டும் தனது போராளி தலைவர் ஒருவரை இழந்திருப்பதாக அறிவித்துள்ளது. அவரை இஸ்ரேலிய அரசு பலஸ்தீனின் புதிய பிரதமர் என இனம் கண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பின் புதிய பிரதமரான போராளி தலைவரையே தாம் அளித்திருப்பதாக குறிப்பிடுகின்றது. போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்த போதும், போர் நிறுத்த உடன்படிக்கை நிகழ்ந்த போதும், ஹமாஸ் போராளிகள் தனது அணிவகுப்பை மேற்கொண்டமை எந்த அளவுக்கு சரியானது என்பதை வெளிப்படுத்தியது. எனவே ஹமாஸ் அமைப்பு புதிய தலைமைகளை உள்வாங்குவதோடு போரை நீடிப்பதற்கான உள்ளூர் கட்டமைப்புகளை விஸ்தரித்து வருகிறது. அதே நேரம் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு இப்போரின் விளைவுகளை அதிகப்படுத்துவதோடு வளர்ச்சியை காரணப்படுத்தி  பலஸ்தீனிய மக்களை அந்த நிலப்பரப்பிலிருந்து அப்புறப்படுத்துவது போரின் பிரதான நோக்கமாக தெரிகிறது. பலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவது, அதனால் ஒரு புதிய நகரத்தை கட்ட முடியும் என்ற எண்ணத்தையும் அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு இஸ்ரேலின் இலக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது. காரணம் காசா நிலப்பரப்பு புவிசார் அரசியல் ரீதியாக மூலோபாயமாக அதிகம் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியதுமான பகுதியில் அமைந்திருக்கின்றது. இதன் அமைவிடம் பொறுத்து இஸ்ரேல் எதிர்கொள்ளுகின்ற அல்லது மேற்கு நாடுகள் எதிர்கொள்கின்ற அனைத்து நெருக்கடிகளுக்கும் காசாவே பிரதான பகுதியாக காணப்படுகிறது. செங்கடல், அதேபோன்று எகிப்தின் சினாய் பகுதி, கோலான் குன்று, மேற்குக்கரை போன்ற அனைத்து பகுதிகளும் காசாவின் எல்லையோரமாக காணப்படுகிறது. இதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை பலப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி உரையாடலை அதிகரித்தால், அப்புறம் தேசம் முழுவதும் இஸ்ரேலியர் குறித்து உடையதாகவும் இஸ்ரேல்- பலஸ்தீனக் கூட்டின் இருப்புக்கானதாகவும் மாறிவிடும். மேற்காசியா அரசியலில் அது ஒரு புதிய திருப்பத்தை தோற்றுவிக்கும். அத்தகைய புதிய தோற்றத்திற்கான அடிப்படையை இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு திட்டமிடுகின்றது. இதனை எதிர்கொள்வது காசாவினதும் பலஸ்தீன மக்களதும் பிரதான நோக்கமாக அமைந்திருக்கும்.

இரண்டாவது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரும் இராணுவ போருக்குரிய முனைப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய போரின் முனைப்புகளில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தனித்துவமானதாகவும் நீண்ட காலமானதாகவும் மாறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கும் என்று இராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, அமெரிக்காவால் ஏற்கனவே இனங்காணப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தைவான் போர் முனையமும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு காரணம் ஆசியாவை மையப்படுத்திய போர்களும் வல்லரசு போட்டித் தன்மையும் புதிய உலக ஒழுங்குக்கான தயாரிப்பு நிகழ தயாராகின்றது. அத்தகைய புதிய உலக ஒழுங்கு என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய பூரணமாகும் என்ற எதிர்பார்ப்பு அநேக ஆய்வாளர்களிடம் உண்டு. அவ்வாறெனில் நிலப்பரப்புகள் சார்ந்து எழுந்திருக்கின்ற போர் என்பது பாரிய பொறுப்புக்குரிய முனைப்புகளை ஏற்படுத்துவதோடு, மேற்காசியா முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்க வாய்ப்பு அதிகம் உண்டு. அத்தகைய வாய்ப்பு நோக்கியே அமெரிக்காவினுடைய ஹவுதி கிளர்ச்சி குழுக்கள் மீதும், இஸ்ரேல் ஹமாஸ் குழுக்கள் மீதும் தாக்குதலை தொடக்கியுள்ளது. எனவே ஆசியாவே இந்த நூற்றாண்டின் பிரதான போர்க்களமாக காட்சி பெறுகின்ற போது இந்து சமுத்திரம் அதன் பிரதான மையப் பகுதியாக காணப்படுகிறது. இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய அடுத்த இராணுவ நகர்வுகள் அதிகம் முனைப்பு பெறுவதற்கான வாய்ப்பு நிலவுகின்றது. ஐரோப்பிய போர் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே தென்படுகிறது. அத்தகைய போரின் முடிவு ஜெலன்ஸ்கியின் முடிவாக அமையும் என்பதை விட ஐரோப்பா கூட்டாக போரின் முனைப்புகளை ஆசியாவை நோக்கியும் இந்து சமுத்திரம் நோக்கியும் நகர்த்துவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது. அதற்கான ஒரு களமுனையாகவே காசா நிலப்பரப்பு அமைய உள்ளது. காசாவை மையப்படுத்தி நிகழ்த்தப்பட போகின்ற அரசியலானது உலக அரசியல் வரலாற்றில் புதிய முனைப்புகளை தோற்றுவிக்க கூடியது .

மூன்றாவது, காசாவில் ஹிஸ்புல்லாவிற்கும் ஹவுதி கிளர்ச்சி குழுக்களுக்கு மட்டுமின்றி ஹமாஸ் அமைப்புக்கு எதிராகவும் சிறிய போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றது. இப்போராட்டங்களினுடைய நோக்கம் இருப்பை அழிப்பது என்பதற்கு அப்பால் சிறிய தாக்குதலை அல்லது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு தாக்குதலை தவிர்ப்பதற்கான ஒரு நகர்வாகவே தென்படுகிறது. காரணம் ஹமாசிற்கு எதிரான போராட்டம் என்பது பெரும் அலையாக எழுச்சி பெறவில்லை. இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற போராட்டங்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இஸ்ரேலிய பிரதமர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஹமாசும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் பலஸ்தீன இஸ்ரேலிய மக்கள் போராட்டங்களை நகர்த்துகின்றனர். அந்த எதிர்ப்புகளால் இருப்பு முழுமையாக அழித்தொழித்தபடக்கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. அதே நேரம் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுக்கு எதிராக ஹமாஸ் தனித்து எதனையும் சாத்தியப்படுத்த முடியாது. அத்தகைய சூழல் ஒன்றுக்குள்ளேயே பலஸ்தீனர்களுடைய போராட்டத்தின் அல்லது எதிர்ப்பு தொடர்பின் எண்ணங்கள் காணப்படுகிறது. தங்களுடைய நிலப்பரப்பில் தாம் தக்கவைக்க தமது போராட்டம் தக்க வைக்கப்படுவதிலும் கவனம் கொண்டிருக்கின்ற பிரிவினராகவே ஹமாஸ் சார்ந்து இருக்கும் மக்கள் கருதுகின்றனர்.

எனவே, தொடங்கி இருக்கும் மூன்றாம் கட்டப் போர் ஒரு நீடித்த போருக்கான முனைப்புகளை கொண்டிருக்கிறது. அதேநேரம் அந்தப் போரின் நிறைவு என்பது புதிய உலகம் ஒழுங்கின் தோற்றத்திற்கான வடிவமாகவே அமையும் என்ற எதிர்பார்க்கை இராணுவ வல்லுநர்களிடம் காணப்படுகிறது. அதற்கான வாய்ப்பு சீனாவின் உடைய அணுகுமுறையில் தங்கி இருக்கின்றது. சீனா அமெரிக்காவை வர்த்தக ரீதியாக எதிர்கொள்வதை கடந்து இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குள் நுழைகின்ற சந்தர்ப்பமே ஒற்றைமைய உலகம் முடிவுக்கு வருவதாக அமையும். பொருளாதார ரீதியில் ஒற்றைமைய உலகம் இயங்குகின்ற ஒரு காலத்தில் இராணுவ ரீதியான சூழலில் அது இரு துருவ அரசியலாக முதன்மைப்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஆகவே ஹமாஸ் இஸ்ரேல் போர் என்பது குறிப்பிடப்பட்ட இரு நாடுகளுக்குமான மக்களுக்குமான போராக மட்டுப்படுத்தி விட முடியாது. அது முழு உலகத்துக்குமான அனுபவத்தை அல்லது புதிய திசையை தோற்றுவிப்பதற்கான போராகவே காட்சி தருகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)