இலங்கையின் புதிய அரசாங்கம் வகுத்துள்ள வெளியுறவு கொள்கை அதிக நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இலங்கையின் இருப்பு அதன் வெளியுறவு கொள்கையிலே தங்கி இருந்தது. கடந்த காலம் முழுவதும் பிராந்திய அடிப்படையிலும் சர்வதேச மட்டத்திலும் வகுத்துக் கொண்ட கொள்கைகளின் பிரகாரமே இலங்கைத் தீவின் அரசியல், பொருளாதாரம், இராணுவ இருப்பு காணப்பட்டது. அதில் பல சந்தர்ப்பங்கள் இலங்கைத் தீவின் அரசியலை பலவீனப்படுத்தியதோடு இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களின் தந்திரோபாய நகர்வுகள் இலங்கைத் தீவின் இருப்பை பாதுகாத்து உள்ளது. இந்து சமுத்திரத்தின் மையத்தில் இலங்கைத் தீவு இருப்பதனால் அதிக பாதுகாப்பையும் அதீதமான நெருக்கடிகளையும் அவ்வப்போது எதிர்கொண்டு வருகிறது. அத்தகைய ஒரு குழப்பகரமான சூழல் ஒன்றுக்குள் இலங்கைத் தீவின் அரசியல், புதிய அரசாங்கத்தின் வழியிலும் காணப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய குழப்பத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதற்கு முயற்சிக்கிறேன்.
குறிப்பாக அண்மைய காலங்களில் இரண்டு மிக முக்கியமான சம்பவங்கள் வெளியுறவின் முக்கியத்துவத்தை அல்லது நெருக்கடியை வெளிப்படுத்தியது. ஒன்று, இலங்கைத் தீவுக்கு வருகை தந்த அமெரிக்காவின் இந்து பசுபிக் கட்டளை அதிகாரியின் வருகையை குறிக்கிறது. இரண்டாவது, இந்திய முதலீட்டு திட்டங்களில் மிக வலிமையானதாக காணப்படும் அதானியின் முதலீட்டு திட்டங்கள் தொடர்பு அழிந்து இருக்கக்கூடிய நெருக்கடி ஆகும். இவ்இரண்டு சம்பவங்களும் இலங்கையின் வெளியுறவில் புதிய அரசாங்கத்தின் புதிய குழப்பமாகவே தென்படுகின்றது. இக்குழப்பத்தில் இரு வேறு அணுகுமுறைகள் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இப்பகுதியை முழுமையாக அவதானிக்க அவசியமானது.
முதலாவது, அமெரிக்காவின் இந்து பசிபிக் கட்டளை அதிகாரி அட்மிரல் சாமுவேல் ஜே. பாப்பரோ (Samuel J. Paparo) மூன்று நாள் விஜயமாக (19-21 மார்ச்) இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன் போது இலங்கையின் ஜனாதிபதி, அரசாங்க உயர் அதிகாரிகள், இராணுவ தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதில் ஜனாதிபதி உடனான சந்திப்பு குறிப்பிடத்தக்க நிகழ்வாகவும் அமைந்திருந்தது. அட்மிரல் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பிற்பாடு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாத்து மற்றும் அமைதியான இந்து சமுத்திரத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றியும் பாராட்டும்’ தெரிவித்தார். அதேபோன்று இலங்கையின் ஜனாதிபதி, ‘இலங்கைக்கு அமெரிக்கா வழங்கி வரும் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளுக்கு நன்றி’ தெரிவித்தார்.
இரண்டாவது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது சர்ச்சைக்குரியவருமாக காணப்படும் ரணில் விக்ரமசிங்க, ‘இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சி அடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை வழங்கத் தவறி இருந்தால், இலங்கையின் நெருக்கடி பாரியதொன்றாக அமைந்திருக்கும். எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி இலங்கைக்கு அவசியமானது. இந்தியா இலங்கையின் அண்டை நாடு. அமெரிக்கா, ரஷ்சியா, சீனா போன்றதல்ல எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இத்தகைய இரு விடயங்களும் இலங்கைத் தீவின் வெளியுறவில் காணப்படும் நெருக்கடியை கோடிட்டு காட்டுகிறது. புதிய அரசாங்கத்தை பொருத்தவரை இந்தியாவுக்கு ஜனாதிபதி தனது முதல் விஜயத்தை மேற்கொண்ட போதும், முழுமையாக இந்தியாவோடு ஒத்துழைப்பு வழங்குமா என்ற குழப்பம் இந்திய தரப்பிடம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. அதானி முதலீட்டு திட்டமானது வடக்கில் 700 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை மையப்படுத்தி 400 தொடக்கம் 500 மில்லியன் இடைப்பட்ட அமெரிக்க டொலர் முதலீட்டு திட்டத்தை கொண்டது என தெரிய வருகின்றது. இத்தகைய முதலீட்டு திட்டங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், அது ஏறக்குறைய இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் காணப்படும் பலவீனத்தை முதன்மைப்படுத்துவதாகவும் அவதானிக்கப்படுகிறது. காரணம் இந்தியா அயல்நாடு என்ற அடிப்படையில் அதன் புவிசார் அரசியல் ஆதிக்கம் செய்யக் கூடியது என்ற அடிப்படையிலும், இலங்கைத் தீவின் வெளியுறவு இந்தியாவை தனித்துவமாக கையாளுகின்ற யுக்தியோடு நகர்த்த திட்டமிடுகிறது. அதனை இந்தியத் தரப்பும் அடையாளம் கண்டிருப்பதாக தகவல்களும் உரையாடல்களும் வெளிப்படுத்தல்களும் காணப்படுகின்றது. இந்தியப் பிரதமருடைய இலங்கை வருகை, அத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை சரிப்படுத்துவதற்கான அம்சமாகக் கூட புரிந்து கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டுகளிலும் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு பல தடவை வருகை தந்துள்ளார். அத்தகைய அரச முறை பயணங்களில் இலங்கைத் தீவுடனான நெருக்கத்தை இந்தியா பேணிக் கொள்வதற்கு அதிக கவனம் கொண்டிருந்தது. அதனுடைய நீட்ச்சியாகவே இந்தியப் பிரதமரது வருகையும் அமைய வாய்ப்புள்ளது. அதனை அண்மைய காலங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க தனது உரை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இந்தியா புவிசார் அரசியல் ரீதியில் இலங்கை மீது தலையீட்டினையோ, ஆதிக்கத்தினையோ செல்வாக்கினையோ மேற்கொள்ளக்கூடிய சக்தி என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதனால் இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கைத் தீவை தென்னிலங்கையின் அரசியலை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தை பிரதிபலித்தார்கள். அதனுடைய அனுபவத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதியும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனைய வலுமிக்க நாடுகளுக்கு முன்னே இந்தியா முதன்மையானது என்பதை அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட பட்டலந்த நெருக்கடியை கையாளவும், அதன் மூலம் இலங்கைத் தீவுக்கு இந்தியாவால் ஏற்படக்கூடிய நெருக்கடியை கையாளவும் கூடிய வகையில் அவரது கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எதார்த்தமாக பார்த்தால், இலங்கை ஆட்சியாளர்கள் அனைவரும் இந்தியாவை முன்னிறுத்தி இலங்கையின் இருப்பை தென்இலங்கையின் ஆட்சியை தக்க வைத்துள்ளனர். அதன் நீட்சியே ரணில் விக்ரமசிங்கவின் வெளிப்பாடாகும்.
அவ்வாறே அமெரிக்க-இலங்கை உறவும் நெருக்கடியானதாக காணப்படுகிறது. வெளிப்படையாக இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவின் நண்பர்களாக காணப்பட்டாலும், அமெரிக்காவுடனும் இந்தியாவுடன் சம நோக்கு நிலையிலான உறவை வைத்துக் கொள்வது மரபாக உள்ளது. புதிய அரசாங்கம் அத்தகைய மரபை பேண முயன்றாலும், அதில் ஒருவகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. அமெரிக்காவும் சீனாவும் பூகோளரீதியில் பகைவர்களாக விளங்கினாலும், இலங்கை ஆட்சியாளர்கள் இருதரப்பையும் நட்புடனேயே கையாண்டுள்ளனர். ஆனால் இந்தோ-பசுபிக் உபாயத்தின் ஒரு அங்கமாக இலங்கைத் தீவை இணைத்துக் கொள்வதில் அமெரிக்கர்கள் அதிக தூரம் வெற்றி கண்டு இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் புதிய ஆட்சியாளர்கள் சீனாவுடன் நட்பை மிகப் பலமானதாக கொண்டிருக்கின்றனர். இலங்கைத் தீவு எப்போதும் இந்தியா-சீனா-அமெரிக்கா என்ற இந்த மூன்று சக்திகளையும் கையாளுவதில் வெற்றி கண்டே வருகின்றது. அத்தகைய வெற்றிகரமான அணுகுமுறையினை புதிய அரசாங்கம் அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாள முயற்சிகள் மேற்கொள்கின்ற போதிலும், முரண்பாடுகளை எதிர்கொள்ளுகின்ற சூழலுக்குள் அவர்களது அணுகுமுறை காணப்படுகிறது. காரணம் இந்தியா அதானியின் முதலீட்டு திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சீர்குலைவுக்கு உட்படுத்திய போது அத்தகைய முரண்பாட்டின் தளத்தை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை முன்னிறுத்துவது இன்னொரு உபாயமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்க தரப்பை பொறுத்தவரையில் இலங்கைத் தீவின் அவசியம் முதன்மையானது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவ்வாறானதொன்றாகவே இலங்கைத் தீவின் அமைவிடம் காணப்படுகிறது. ஆகவே இந்த இழுபறியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிக குழப்பத்தை அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இதனை சரிசெய்வதே ரணில் விக்ரமசிங்கவின் உரைப் பகுதியாக காணப்படுகிறது.
எனவே, இலங்கையின் வெளியுறவு சீன சார்பாக ஏனைய சக்திகள் கையாளுகின்ற நிலைக்குள்ளேயே கடந்த கால ஆட்சியும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியும் காணப்படுகிறது. ஆனால் கடந்த கால ஆட்சியின் அனுபவமும் அதன் அணுகுமுறையும் புதிய ஆட்சியில் காணப்படாமை நெருக்கடிக்கான முக்கிய விடயமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டிலும் பிராந்திய அடிப்படையிலும் காணப்படும் நெருக்கடிகளை வெளியுறவுக்கூடாக தீர்த்துக் கொள்வது என்பதைக் கடந்து, நாடுகளுக்கு இடையிலான வெளியுறவை கையாள்வதன் மூலம் அல்லது நாடுகளை எதிர்கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முனைகின்றது. அடிப்படையில் புதிய அரசாங்கம் சீன சார்புக் கொள்கையில் நின்றுகொண்டு இந்தியாவையும் அமெரிக்காவையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவகையில் கையாண்டு வருகின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)