அரசியல் கட்டுரைகள்

புதிய புவிசார் அரசியல் விதிகளை உருவாக்கும் ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்ய -உக்ரைன் போர் எல்லையில்லாத திரிபுகளை உருவாக்கி பிரசார வெளியில் ஏற்படுத்தி வருகிறது. முற்றிலும் முரணானவற்றை உரையாடுவதை விடுத்து உண்மைக்கும் அறிவிற்கும் முரணான பொய்களை உரைத்து வருகிறது. இதனை ஊடகப்போர் என்று கடந்து செல்ல முடியாது. மாறாக போலியான விம்பத்தை உருவாக்கும் உரையாடலாகவே தெரிகிறது. உலகம் அணுவாயுதப் போருக்கு போகுமாகவிருந்தால் அதன் விளைவுகள் எதுவென்பதும் அத்தகைய சக்திகளுக்கு நன்கு தெரிந்த விடயமே. ரஷ்யா அணுவாயுதத்தை பிரயோகிக்குமாக இருந்தால் அணுவாயுதத்தை உடைய நாடுகளும் அதனை பிரயோகிக்க ஆரம்பிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வகைத் தாக்குதல் உலகத்தை முழுமையாக அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும். இக்கட்டுரையும் உக்ரைனில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தரப்போகும் எச்சரிக்கைகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது, உக்ரைனிலுள்ள ஜபோரிஜ்ஜிஹ (Zapornzszhia) அணுஉலை மீது ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவை கோரியுள்ளார். அது பற்றிய தகவல்களை அதிகம் வெளியிட்ட உக்ரைன் வெளியுறவு அமைச்சு, செர்ணோபில் அணுஉலையை விட பத்து மடங்கு அழிவை ஏற்படுத்தும் எனவும் தற்போது ரஷ்ய ஏவுகணைகள் அணு உலை அமைந்துள்ள பகுதியை தொடர்ச்சியாக தாக்குவதாகவும் சில பகுதிகள் தீப்பிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரம் மேற்குலக ஊடகங்களுக்கு புறம்பாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும்போது அத்தகைய அணு உலையை அண்மித்துள்ள ரஷ்யப் படைகள் துப்பாக்கியால் சுடுவதாகவும் எச்சரிக்கை எழுப்பப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. எதுவானாலும் அணுவாயுதம் தொடர்பில் ரஷ்யாவும் உக்ரையினும் அதிக ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அத்தகைய நகர்வு தமது மக்களையே அழிப்பதாகவும் அணுவாயுதத் தாக்குதல் நிகழுமாயின் அது ரஷ்யர்களையும் உக்ரைனியர்களையும் முதலில் அழிப்பதாகவே அமையும். செர்ணோபில் அணுக்கசிவானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை முன்னாள் சோவியத் யூனியன் தேசியங்கள் அனுபவித்துள்ளன என்பது நினைவுகோரத் தக்கது. அதே நேரம் ரஷ்யாவுடன் இன, மத மற்றும் மொழி தொடர்புகளையும் தரை மற்றும் எல்லைத் தொடர்புகளை அதிகம் கொண்டுள்ள உக்ரைனியர்கள் மீது அணுவாயுதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டால் அதன் விளைவு ரஷ்யர்களுக்குமானதே. அத்தகைய நகர்வை ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்வதென்பது இறுதியிலும் இறுதியான தெரிவாகவே அமையும். அத்தகைய தெரிவு கூட தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாகும். மேற்குலகம்-ரஷ்யா அணுவாயுதத்தை பிரயோகிக்கப் போவதாக குறிப்பிடுவதன் மூலம் போரில் நேட்டோவை ஈடுபடுத்த முனைகிறது. அது மட்டுமன்றி அப்பிராந்தியத்திற்குள் நுழையும் வாய்ப்பினை அமெரிக்காவும் நேட்டோவும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளன. அதனாலேயே இப்போரை உலக அபிப்பிராயத்திற்குள்ளால் நகர்த்த திட்டமிடுகின்றன. இவ்வாறு பல திட்டமிடல்களை நேட்டோ வெளிப்படுத்தி வருகிறது.