அரசியல் கட்டுரைகள்

‘அமெரிக்கா முதல்’ என்பது அமெரிக்காவை மைய்யப்படுத்தியதா? டொனால்ட் ட்ரம்ப்பை மைய்யப்படுத்தியதா?

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி காலப்பகுதி வரி முறைமைகளால் உலகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்திருக்கும் வரிக்கொள்கைகள் அரசியல் பொருளாதார ரீதியில் அதிக குழப்பத்தை நவதாரான்மைவாத சக்திகள் இடம் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. தாராண்மைவாத செய்முறையும் நவதாரண்மைவாத செய்முறையும் உலகமயவாக்கலின் அங்கமாக இருந்த போதும், அவை அனைத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அணுகுமுறைகளால் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஐரோப்பா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரி அதிகரித்து இருப்பது என்பது, அமெரிக்கா உள்நாட்டு உற்பத்தி பற்றிய எண்ணத்தை தீவிரப்படுத்துகிறதா என்ற கேள்வியை முன்வைக்க வழிவகுத்துள்ளது. மரபுகளை அதிகம் கைவிட்ட இந்த உலகம் முழுவதும் அது பற்றிய எண்ணங்களுக்குள் பிரவேசிக்கிறதா என்ற அனுபவவாதம் தவிர்க்க முடியாததாக எழுந்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரிவிதிப்பு அறிவிப்புக்கள் உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் விளைவுகளை தேடுவதாக உள்ளது.

குறிப்பாக, கடந்த கால அனுபவங்களில் இருந்து ஆய்வாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் உலகை அணுக முயலுகின்றனர். கடந்த கால உலக வரலாற்றில் நியமங்களை மேல் சுழற்சிக்கு உட்படுத்தி தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் முதன்மைப்படுத்துகின்றனர். ஆனால் உலகத்தின் எதிர்காலம் பற்றிய உரையாடலை சில தனி நபர்களும் சிந்தனையாளர்களும் அரசியல் தலைவர்களும் ஏற்படுத்தி விட்டுப் போவது மரபாக உள்ளது. அத்தகைய ஒரு முயற்சிக்குள்ளேயே அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணிக்கிறாரா என்ற கேள்வி தவிர்க்க முடியாது. உலகமயவாக்கத்தை முதன்மைப்படுத்திய அமெரிக்கர்கள், வரிமுறையின் மூலம் அதற்கு எதிரான எண்ணங்களை கொண்டு வர விளைவதாக கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அமெரிக்காவின் வரி செய்முறைக்கு கட்டுப்பட்டு இஸ்ரேல், இந்தியா போன்ற நாடுகள் முறைமையை மாற்றி அமைக்க திட்டமிடுகின்றன. இஸ்ரேல் பாராளுமன்றம் அதன் நிதி குழுவும் முழுமையாகவே அமெரிக்காவுக்கான பொருட்களுக்கான வரி விதிப்பை நீக்கி உள்ளது. இத்தகைய அறிவிப்பானது உற்றுநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேபோன்று இந்தியாவும் ஏனைய தென்பூகோள நாடுகளும் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு வரி விதிப்பினை மட்டுப்படுத்த முயல்கின்றனர். அல்லது திட்டமிடுகின்றனர். அவ்வாறெனின் அமெரிக்காவின் அணுகுமுறை உலகளாவிய ரீதியில் வரி தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாட்டு நிலையை சரி செய்யப் போவதாகவே தெரிகிறது. ஆனால் அத்தகைய சரிப்படுத்தல் அனைத்து நாடுகளின் நியதிகளுக்குள் உட்படுமா என்ற கேள்வி அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளின் கைகளில் தங்கி உள்ளது. அணுகுமுறைகளை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனையும் போது, உலகம் மீண்டும் இரு துருவ வடிவத்தை பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரக்கூடிய சூழலுக்கான வாய்ப்பு இருக்கின்றது. அத்தகைய சூழல் சீனாவிற்கு மட்டுமின்றி மகிழ்ச்சியாகவே இந்தியா, பிரேசில் போன்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கும் வாய்ப்பான களத்தை தோற்றுவிக்கும் என்ற விண்ணப்பாங்கு அதிகரித்துள்ளது. அதனை ஆழமாக புரிந்து கொள்ளுதல் அவசியமானது.

முதலாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கை உலக நாடுகளை அமெரிக்காவில் இருந்து விலக்கிக் கொள்ளும் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அதாவது ட்ரம்பின் ‘அமெரிக்கா முதல்’ (America First) என்ற எண்ணம் அமெரிக்காவை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்துமா என்ற கேள்வியை மேலும் பலப்படுத்தி உள்ளது. ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்திருக்கும் நேட்டோ தொடர்பான நெருக்கடியினை கையாளுகின்ற விதத்தில் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளை முன்வைக்க முயன்றிருக்கின்றனர். பிரித்தானியாவை அல்லது பிரித்தானியா உடனான வரி தொடர்பான கொள்கை சமப்படுத்தியிருக்கின்றன. பிரித்தானிய-அமெரிக்க உறவு என்பது நீண்ட பாரம்பரியத்தை கொண்டது, தனித்துவமானது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வரி முறை என்பது பரஸ்பரம் புரிதலோடு நகர்த்தப்படும். ஏனைய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்கின்ற தன்மை என்பது நேட்டோபையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றது. ஐரோப்பாவுக்குள் பிரிட்டன்; ஆசியாவுக்குள் இந்தியா மற்றும் இஸ்ரேல் அமெரிக்காவோடு சேர்ந்து பயணிக்கின்ற ஒரு சூழல் ஒன்றை தோற்றுவித்திருக்கின்றன. இது ஏனைய நாடுகளையும் அத்தகைய அணுகுமுறைகளுக்குள் கொண்டு வருமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 1979களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உருவாகிய வர்த்தக செய்முறை ஒன்றின் தீவிரப் போக்கும் அணுகுமுறையும் அத்தகைய பொருளாதார நெருக்கடியை முதலாளித்துவ நாடுகளிருந்து விடுவித்து இருந்தது. ஒரு வகையில் முதலாளித்துவ நாடுகள் வரியேற்ற வர்த்தக முறைமையினூடாகவே உலகளாவிய பொருளாதாரப் பணி முறைமையில் அரசியல் பொருளாதார முறையை கட்டமைத்திருந்தது. ஆனால் 2025இல் வரையறுக்கப்பட்ட ஒரு நாட்டின் வரிச் செய்முறை அந்த நாட்டின் பொருளாதார விருத்தியையும் வளர்ச்சியையும் பற்றியதாக நோக்கப்படுகிறது.

இரண்டாவது, டொனால்ட் ட்ரம்பை பொருத்தவரையில் வரி விதிப்பு முறைமையை மேற்கொள்ள முயலுகின்ற போது, அவர் முன்வைக்கும் விவாதங்கள் சற்று வேறுபட்டதாகவே உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் எழுச்சியை சாத்தியப்படுத்துவதும், அமெரிக்கா பொருட்களுக்கு உலக சந்தையில் வழங்கப்படும் வரியினுடைய அளவு மட்டுப்படுத்துவதும் அவரது பிரதான நோக்கமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் உதவித்திட்டத்தை முற்றாகவே நிறுத்தி இருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் இலாபம் பற்றிய உள்நாட்டு பரிமாணத்தை பலப்படுத்த திட்டமிடுகிறது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, ஆட்சியாளர்களின் முதலீட்டு திட்டங்களாலும் ஆட்சியாளர்களுக்கு சார்பான நிறுவனங்களின் முதலீட்டு வாய்ப்புகளாலும் ஒழுங்கமைக்கப்பட போவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிய முயற்சிக்கின்றார்கள். முதலாவது ஆட்சிக்காலப் பகுதியில் விதித்த வரி முறைகள் அமெரிக்க பொருளாதாரத்தை பாதித்தது என்ற விவாதமும் அமெரிக்க ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறெனில் அமெரிக்க நிர்வாக கட்டமைப்பு முறை இத்தகைய செய்முறையை அமெரிக்காவை பலவீனப்படுத்துகின்றது என்ற நோக்கு நிலையில் அணுகாது அமெரிக்க ஆட்சியாளர்களின் நோக்கு நிலையில் இருந்து அணுகுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ட்ரம்பின் ‘அமெரிக்கா முதல்’ என்பது அமெரிக்க ஆட்சியாளர்களின் நலன் சார்ந்த கோஷமா? அல்லது தேசியவாதமா? அல்லது பொருளாதாரத் தேசியவாதமா? என்ற குழப்பம் தவிர்க்க முடியாது. இதற்கு வழி சேர்க்கும் விதத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி அரசியலமைப்பில் இல்லாத ஒன்றை தோற்றுவிப்பது பற்றிய உரையாடலை ஊடகங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ட்ரம்ப் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக திட்டமிடுவதும், அதற்கான அரசியல் அமைப்பு முறையை மாற்றம் செய்வதும் உரையாடப்படுகின்ற ஒரு அம்சமாக காணப்படுகிறது. இவை அனைத்தும் ட்ரம்பை மையப்படுத்திய நகர்வா? அல்லது அமெரிக்காவை மையப்படுத்திய நகர்வா? என்ற சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

எனவே, டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளை பாரிய அளவில் பாதிக்கக் கூடியது என்ற விவாதம் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. மாறாக உலகத்தை மீளவும் இரு துருவங்களாக பொருளாதார இயங்கியலுக்குள் அல்லது அரசியல் பொருளாதார எண்ணங்களுக்குள் கட்டமைப்பதற்கான புறச் சூழலையே வெளிப்படுத்துகிறது. ‘அமெரிக்கா முதல்’ என்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் முதல் என்பதையும் அடையாளப்படுத்துவதாகவே அணுகுமுறைகள் காணப்படுகிறது. தொழிற்துறை விருத்தி, உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்பு என்பன ஏற்றுமதி இறக்குமதியினுடைய சாத்தியப்பாட்டையும், சந்தை கட்டமைப்பையும் நிரப்பீடு செய்கின்ற போது மட்டுமே, செழிப்பான பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டில் சாத்தியமாகும். அத்தகைய செய்முறைக்குள் டொனால்ட் ட்ரம்பின் வரிகள் அமையுமா என்பது விவாதத்துக்குரியது. பழைய உலகத்தின் அனுபவங்களிலிருந்து இந்த உலகத்தை நோக்குவதை விட எதிர்கால உலகத்தில் இருப்பை உருவாக்க முயலுகின்ற சிந்தனைகளிலிருந்தும் தலைமைகளிலிருந்தும் உலகத்தை பார்த்தல் அவசியமானது. அத்தகைய உலக நியதிகளை மாற்ற திட்டமிட்ட அலெக்சாண்டர் நெப்போலியன், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் தோற்றுப் போனதையும் நினைவு கொள்ளுதல் பொருத்தப்பாடு உடையது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)