இலங்கை-இந்தியா உறவில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய விஜயமாக இந்திய பிரதமரது இலங்கைப் பயணம் அமைந்திருந்தது. பொருளாதார, மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உடன்பாடுகள் எட்டப்பட்டதோடு கலாச்சார ரீதியான நட்புறவும் முதன்மைப்படுத்தப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் கருத்து முன்வைத்துள்ளன. இக்கட்டுரையும் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம், இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தேடுவதாக உள்ளது.
முதலாவது, அரசியல் ரீதியில் பாரிய நன்மைகளை இலங்கை அரசாங்கம் அடைந்திருக்கின்றன. ஜே.வி.பி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்திய எதிர்ப்புவாதத்தையே தனது ஆரம்பக் கொள்கையாக கொண்டிருந்தது. அத்தகைய கொள்கைக்கு மாறாக இந்திய நட்புறவை பேணுதல் என்பது புதிய அரசாங்கத்தின் அரசியல்ரீதியான விளைவாகவே தெரிகிறது. இலங்கைத் தீவு புவிசார் அரசியல் ரீதியில் இந்தியாவை அனுசரித்து செயல்பட வேண்டும் என்ற நியமத்தை அதிகம் கொண்டதாகவே காணப்படுகிறது. கடந்த கால ஆட்சிகளிலும் இந்தியாவுக்கு எதிரான சூழல் எல்லாக் காலத்திலும் அதிக முரண்பாட்டையும் பின்னடைவையுமே இலங்கைத் தீவுக்கு ஏற்படுத்தி இருந்தது. அத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை இரு அரசுகளும் பகிருகின்றன. 1960 முதல் ஜே.வி.பி இந்திய எதிர்ப்பு வாதத்தையே அதிகம் முதன்மைப்படுத்தி இலங்கை தீவின் அரசியலில் செல்வாக்கு பெற்றது. இத்தகைய சூழல் ஆட்சியை கட்டமைக்கின்ற போது சாத்தியமற்றது என்பதை உணர்ந்து கொண்ட அத்தரப்பு, இந்தியாவோடு நெருக்கமான உறவை பேணுவது அவசியம் என கருதியது. அதன் அடிப்படையிலே அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியான பின்னர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயமும், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தமையும் ஜே.வி.பி-யின் அடிப்படை கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நகர்வாகவே தெரிகின்றது. இது இலங்கைத் தீவின் அரசியல் மட்டுமல்ல ஜே.வி.பி-யினுடைய அரசியல் நீண்ட கால இருப்புக்கான முதலீடாகவே நோக்கப்படுதல் வேண்டும்.
இரண்டாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அநேகமான உடன்பாடுகள் பொருளாதார அடிப்படையிலான அம்சங்களை பிரதிபலிப்பதாகவே காணப்படுகிறது. இத்தகைய புரிந்துணர்வு உடன்படிக்கையில் சுகாதாரம், மின் சக்தி, எரிபொருள், கல்வி மற்றும் வர்த்தக உடன்பாடுகள் அதிக முக்கியத்துவத்தை பொருளாதார ரீதியான விடயங்களில் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடிமிக்க சூழலை பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதற்கான அடிப்படைகளை கொடுத்திருக்கின்றது. அதேநேரம் இத்தகைய பொருளாதார ஒத்துழைப்புக்கள் பலமான நட்புறவை ஏற்படுத்துவதுடன், மறுபக்கத்தில் இலங்கையை பொருளாதாரரீதியாக இந்தியா ஒன்றிணைத்து விடும் என்ற புரிதலையும் அதிகம் ஏற்படுத்துவதற்கு இந்திய தரப்பு முனைவதாகவே தெரிகிறது. ஆனாலும் இலங்கைத்தீவின் உடன்பாடு சார்ந்த அனுபவம் அத்தகைய உடன்படிக்கைகளின் நடைமுறைத் தன்மையை கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் சந்தேகத்திற்கு உள்ளாக்கிறது. ஒருபோதும் இலங்கை ஆட்சி முறையில் உடன்பாடுகள் அமுலாக்கப்படுவதையோ, பின்பற்றப்படுவதையோ கண்டு கொள்ள முடியாது. அண்மைய சான்றாக மன்னார் காற்றாலை விவகாரம் விவாதமாகவே உள்ளது. அப்படியாயின் இத்தகைய உடன்படிக்கைகளால் பிராந்திய அடிப்படையில் ஒத்துழைப்புக்குரிய சூழலை இலங்கை அனுசரித்து செயல்படுகிறது என்ற பிம்பத்தை இந்தியத் தரப்புக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் பொருளாதார ரீதியான உடன்பாடுகள் ஆரோக்கியமான சூழ்நிலையை இலங்கைத் தீவுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. உடன்பாடுகள் அமுல்படாமல் போவது என்பதற்கு அப்பால், உடன்பாடுகளை எட்டுவதன் மூலம் இலங்கைத் தீவு தனது அரசியலை ஆரோக்கியமானதாக கட்டமைத்திருக்கின்றது. இது நிலையான அரசியல் இருப்புக்கு அனுசரணை வழங்குவதாகவும் அமைய வாய்ப்புள்ளது. சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை அதிகம் விமர்சித்துக் கொள்ளும் இந்தியத் தரப்பு இத்தகைய உடன்படிக்கையின் மூலம் அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துள்ளது. ஆனால் எதார்த்தம் அத்தகைய உடன்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மூன்றாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒன்றாக பாதுகாப்பு உடன்பாடு முதன்மைப்படுத்தப்படுகிறது. உடன்பாட்டின் முழுமையான விவரங்கள் வெளிவராத போதும், கூட்டுப் பயிற்சி, புலனாய்வு தகவலுக்கான ஒத்துழைப்பு, கடல் ரீதியான புரிந்துணர்வு போன்ற அம்சங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. அத்தகைய விடயங்களை மையப்படுத்தியே பாதுகாப்பு உடன்பாடு பற்றிய விவாதம் முன்வைக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்களை முதன்மைப்படுத்தியது. அதேபோன்று 2025ஆம் ஆண்டு புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை இலங்கைத்தீவோடு இந்தியா மேற்கொண்டுள்ளது. இத்தகைய உடன்பாடு இருநாட்டுக்குமான அச்சங்களையும் சந்தேகங்களையும் முடிவுக்கு கொண்டு வந்ததோடு, சீனாவுடன் இலங்கை கொண்டிருக்கின்ற இராணுவ ரீதியான விடயங்களை கையாளுவதற்கான உத்தியாகவே இது காணப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான நகர்வாகவே கருதப்படுகின்றது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தமே 30 ஆண்டுகளைக் கடந்து இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிய உடன்பாடுகள் அதுவும் பாதுகாப்பு சார்ந்ததாக நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது மோசமான இராஜதந்திர அல்லது இராஜீக பலவீனமாகவே தெரிகின்றது. இதனை கடந்து செல்வதாகவும், கையாளும் விதத்திலே இலங்கையின் கடந்த கால ஆட்சி முறைகள் காணப்பட்டது. புதிய அரசாங்கத்திலும் அதன் நீட்சியை எதிர்பார்க்கக் கூடியதாகவே கருதப்படுகிறது. இதனால் புதிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையால், இந்தியா எதிர் பார்ப்பது போன்று அல்லது உலக நாடுகள் கருதுவது போன்று வெற்றிகரமான இந்திய-இலங்கை பாதுகாப்பு உறவை சாத்தியப்படுத்தும் என கருதி விட முடியாது.
நான்காவது, கலாச்சார ரீதியான உறவை இலங்கை-இந்தியாவுடன் பலப்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு இந்துத்துவ நாடாக இருந்தாலும், இந்தியாவில் இருந்தே பௌத்தம் இலங்கைத் தீவில் பரவல் அடைந்தது. பௌத்தம் இந்தியாவின் அசோகப் பேரரசு காலத்தில் முன்வைக்கப்பட்டாலும், அதனை இலங்கைத் தீவு முதன்மையாகக் கொண்டு இந்தியாவுடன் நெருக்கத்தை மத அடிப்படையில் பேணுவதற்கு வெற்றிகரமான அணுகுமுறைகளை தோற்றுவித்து வருகிறது. இந்தியாவும் அகிம்சை என்ற அடிப்படையில் கௌதம புத்தரையும், மகாத்மா காந்தியையும் சர்வதேச மட்டத்தில் முதன்மைப்படுத்திக் கொண்டு, உள்நாட்டில் இந்து மதத்தை அரசியல் மதமாக மாற்றி வருகின்றது. அத்தகைய சூழலுக்குள்ளேயே இலங்கையின் பௌத்தத்தை அதிகம் நேசிப்பவராக இந்தியப் பிரதமர் இலங்கை விஜயத்தில் செயற்பட்டிருந்தார். குறிப்பாக அனுராதபுரத்திற்கு பௌத்த விகாரையை தரிசிப்பதற்காக சென்ற இந்தியப் பிரதமர், பௌத்த துறவி ஒருவரை மண்டியிட்டு வழிபாடு செய்யும் நிகழ்வு கலாச்சார ரீதியான உறவையும் மத ரீதியான புரிதலையும் ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு வகையில் இலங்கைத் தீவின் பௌத்தத்துக்கும், பௌத்த பாரம்பரியத்திற்கும், பௌத்தத்தின் நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதாகவே தெரிகின்றது. இலங்கைத் தீவில் பௌத்த மதம் ஏற்படுத்தி இருக்கும் அனைத்து மீறல்களுக்கும் அங்கீகாரம் அளிப்பது போன்று இந்திய பிரதமரது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
எனவே, இலங்கை விஜயத்தின் போது இந்தியா அடைந்து கொண்ட நன்மைகளை விட இலங்கைத் தீவு அதிகமான இலாபங்களை சந்தித்துள்ளது. நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்தில் இரு தரப்பும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் உறவினையும் கட்டமைத்தாலும், நடைமுறையில் இலங்கை ஆட்சியாளர்களின் அணுகுமுறை மேலும் இலங்கை தீவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. அரசியல் ரீதியில் பலமான நட்புறவு ஒன்றை புதிய அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதோடு, பொருளாதார-இராணுவ-கலாச்சார ரீதியில் நெருக்கமான நட்புறவை கட்டமைப்பதற்கான உடன்பாடுகளை சாத்தியப்படுத்தி உள்ளது. இந்தியாவை விட இலங்கையின் இருப்புக்கு இலாபகரமானதாகவே காணப்படுகிறது. எதிர்கால இலங்கைத் தீவின் அரசியலை நிர்ணயிப்பதில் இந்தியாவுக்கு இருக்கக் கூடிய முக்கியத்துவமான பங்கினை இந்த விஜயம் உணர்த்தி இருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் நடைமுறை சாத்தியப்பாட்டை கொண்டிருக்கின்ற போது மட்டுமே இந்தியாவுக்கும், இந்தியாவின் நலன்களுக்கும் உத்தரவாதம் கிடைப்பதாக அமையும். மாறாக இலங்கைத் தீவு அதிகமான இலாபங்களை எட்டப்பட்ட உடன்பாடுகள் ஊடாகவும், பிரதமரது இலங்கை விஜயத்தின் ஊடாகவும் சாத்தியப்படுத்தி இருக்கின்றனது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)