இந்திய பிரதமரது இலங்கை விஜயம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டு நாட்டின் ஊடகப் பரப்புகளிலும் தமது சாதனைகளை பதிவு செய்து கொள்கின்ற தன்மையினைக் காண முடிகின்றது. இந்திய ஊடகவியலாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் இலங்கையுடன் உறவில் அதிக சாதனை படைத்திருப்பதாக முதன்மைப்படுத்துகின்றனர். அதேவேளை இலங்கைத் தீவிலும் தென்னிலங்கை ஊடகங்கள் இந்தியாவை கையாளுவதில் புதிய அரசாங்கம் வெற்றிகரமாக பயணிப்பதாக குறிப்பிடுகின்றனர். இந்தியப் பிரதமரின் வருகை மிறி மாறி இரு நாடுகளின் நலன்களை மையப்படுத்தி இருக்கின்ற சூழலில், இலங்கைத் தமிழர் முற்றாகவே தோற்றுப் போய் இருக்கின்ற அரசியல் வெளியை கண்டு கொள்ள முடிகின்றது. இக்கட்டுரையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது இலங்கை விஜயம் ஏற்படுத்தி இருக்கக்கூடிய உண்மையான பக்கங்களை தேடுவதற்கு அதிகம் முயலுகிறது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்து இட்டதோடு, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்தார். மேலும், இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு கெலிகொப்டரில் தமிழகத்தில் இராமேஸ்வரம் சென்று மீள அமைக்கப்பட்ட பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியும் அங்கு இடம்பெற்ற சம்பவங்களும் இலங்கைத் தீவின் அரசியலில் முக்கியமானதாக உரையாடப்படுகிறது. அத்தகைய உரையாடல்களில் இடம்பிடித்திருக்கும் பிரதான காட்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பௌத்தப்பிக்குள் கால்களை தொட்டு வணங்கும் விடயமே ஆகும். அதுமட்டுமின்றி இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் விட பாதுகாப்பு தொடர்பில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடும், பாதுகாப்பு அணிவகுப்பின் போது இந்திய பிரதமர் செங்கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு, இந்திய பாதுகாப்பு படைகள் சகிதம் இந்தியப் பிரதமர் அணி இலங்கை காவல்துறையின் அணி வகுப்பில் கலந்து கொண்டது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதனை ஆழமாக பார்த்தல் அவசியமானது.
முதலாவது, இந்தியப் பிரதமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுராதபுரத்துக்கு விஜயம் செய்து, பௌத்த விகாரை வழிபாட்டின் போது பௌத்த பிக்கு ஒருவரின் கால்களை விழுந்து வணங்கி இருந்தார். இக்காட்சி அதிக விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்துவாகவே தன்னை காட்டிக் கொள்கின்றவர். பௌத்த துறவியின் முன் பௌத்தர் அல்லாத ஒருவர் வழிபடுகின்ற மரபுகள் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, பௌத்தர் போன்றே பௌத்த பிக்குவை நரேந்திர மோடி தொழுது இருந்தார். அது அடிப்படையில் இந்திய தேசத்தின் இருப்பையும், இந்திய ஆட்சித் துறையின் இருப்பையும் அதிகம் கேவலப்படுத்தியதோடு, அவமதித்ததாகவே தெரிகின்றது. பௌத்தர் அல்லாத ஒருவர் அவ்வகை வழிபாட்டை மேற்கொள்ளுதல் என்பது சாதாரண மனிதனுக்கு ஏதோ ஒரு அடிப்படையில் உரியதாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் அதிகாரம் பொருந்திய தலைவர் ஒருவர் அவ்வாறு மண்டியிடுவது என்பது இந்திய தேசத்தின் பெருமைகளை அவமதிப்பதாகவே அவதானிக்கப்படுகிறது. இந்திய தேசம் புரட்சியாளர்களாலும், அவர்களின் போராட்ட நியாயப்பாடுகளாலும், எழுந்து நிற்கும் தேசமாக தன்னை காட்டி கொள்ளுகின்ற மரபை கடந்த காலத் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பதவிக்காலத்தில் அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும், இலங்கை விஜயத்தின்போதும் இந்திய தேசத்தை அவமதிக்கும் விதத்திலே செயல்பட்டு இருக்கின்றார். இலங்கைத் தீவு பௌத்த தேசம் என்பதற்கு அப்பால், அத்தகைய பௌத்த மதம் இந்து மதத்தில் இருந்து தோன்றியதற்கு தோன்றியது என்பதற்கு அப்பால், இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தம் எத்தகைய அராஜகத்தையும் ஆக்கிரமிப்பையும் அழிப்புக்களையும் செய்கின்ற வரலாற்றை புரிந்து கொள்ளாத ஒரு தலைவராக அவரது நடத்தை அவதானிக்கப்படுகிறது. பௌத்தம் அஹிம்சைக்கு சமனானது. அத்தகைய அகிம்சையை போதிக்கும் பௌத்தம் இலங்கை தீவில் அராஜகத்தையே அதிகம் கொண்டிருக்கின்றது. அத்தகைய அராஜகத்தின் அடையாளங்களை இந்திய பிரதமர் ஏற்றுக்கொள்வது போன்ற வெளிப்பாட்டையே பிக்குவின் முன்னே அவரது மண்டியிடல் காணப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் அச்சுறுத்தலால் இலங்கை-இந்தியா உடன்பாடு எட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்ற ஒரு சூழலில், புதிதாக வரையப்பட்டிருக்கிற பாதுகாப்பு உடன்பாடு என்பது மண்டி இடுவதன் ஊடாகவும் அடிவருடிகளாக காட்டிக் கொள்வதன் ஊடாகவும் அடையப்பட்டுள்ளதா என்ற கேள்வி ஏற்படுத்துகின்றது. இது ஒரு அவமானகரமான உடன்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கை உடன் இந்தியா பாதுகாப்பு உடன்பாடு செய்வது என்பது சமவலுவுடைய நாடுகளுக்கு இடையிலான உடன்பாடாக புரிந்து கொள்ள முடியாது உள்ளது. குறைந்தபட்சம் பெரும் இந்திய தேசம் தனது சுதேச மரபுகளில் இருந்து பண்பாடுகளில் இருந்து அத்தகைய உடன்பாட்டை மேற்கொண்டு இருத்தல் வேண்டும்.
இரண்டாவது, பாதுகாப்பு உடன்படிக்கை உட்பட ஏழு உடன்படிக்கையினை இந்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக தெரிய வருகின்றது. இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் உடன்பாடுகளும், அரசியலமைப்புக்களும் எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது என்பது ஈழத் தமிழர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விடயமாக அமைகின்றது. கடந்த கால வரலாறு முழுவதும் உடன்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் இலங்கைத் தீவின் அரசு எவ்வாறு நகர்த்தியுள்ளது என்பததையும்; உடன்பாடுகளை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் ஈழத்தமிழர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இந்திய ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்திலேயே 1987ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்த உடன்படிக்கையில் மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டமூலம், 30 வருடங்களைக் கடந்து அமுல்படுத்த முடியாமல் இருக்கிறது. சீனாவுக்கு எதிராக அல்லது சீன-இலங்கை உறவை தகர்க்கும் விதத்தில் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை செய்திருப்பதாக இந்திய தரப்பு கருதுகிறது. ஆனால் அத்தகைய உடன்பாடுகளை அமுல்படுத்தப்படுவது, பின்பற்றப்படுவது இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் நிகழாத ஒன்று ஆகும். அதனை கண்டுகொள்ளாத வகையில் இந்திய ஊடகங்களதும் இந்திய ஆட்சியாளர்களதும் வெளிப்பாடுகளையும் பார்க்கின்ற போது, அவர்களது அரசியலும் இராஜதந்திரம் எப்படியானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியத் தரப்பை எவ்வாறு இலங்கைத் தரப்பு கையாளுகிறது என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இந்தியா ஒரு பெரிய தேசம் என்ற அடிப்படையில் இந்நெருக்கடிகளும் தோல்விகளும் இந்தியாவை பாதிக்காத வரையில் இந்தியாவுக்கு ஆரோக்கியமானதாகவே அது அமையும். ஆனால் இந்தியாவை ஒரு நட்பு தரப்பாக கருதும் ஈழத்தமிழர்கள் அதன் உண்மை அர்த்தங்களையும், வடிவங்களையும் நன்கு விளங்கிக் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இவ்விடயத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். செய்யப்பட்ட அனைத்து உடன்பாடுகளும் அமுலாகுவது என்பது சாத்தியமற்றதொன்றாகவே தெரிகிறது. இதுவே கடந்த கால இலங்கைத் தீவின் அரசியல் வரலாறும் ஆகும்.
மூன்றாவது, ஈழத்தமிழர்கள் இந்திய பிரதமருடைய வருகையை அடிப்படை அரசியலாக்க முடியும் என கருதினார்கள். அல்லது அப்படி ஒரு தோற்றப்பாட்டை ஈழத் தமிழர்கள் முன்னிறுத்த வேண்டுமென எண்ணிக் கொண்டனர். ஆனால் நடைமுறையோ தலைகீழானதாகியது. இந்தியப் பிரதமரை பொறுத்தவரையில் இலங்கைத் தீவு மற்றும் இந்தியத் தேசம் புரிந்துணர்வுடன் செயல்படுவது அவசியமானது. ஈழத் தமிழரும் – மலையக தமிழரும் – தமிழகத் தமிழர்களும் எத்தகைய நலன்களையும் அடைந்து விடுவதை விட, இந்தியத் தேசமும் இலங்கை அரசும் நன்மையுடைய விடயங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளுகின்ற நகர்வினை சாத்தியப்படுத்தியிருந்தார். அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படும் எனவும், இலங்கைத் தமிழர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்ததோடு இந்திய பிரதமரது உரையாடல் நிறைவு பெற்றது. நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து இன்றுவரை இத்தகைய விடயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார். அவர் மட்டுமின்றி வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளர்கள் போன்ற அனைவருமே அத்தகைய விடயத்தை தெரிவித்து வருகின்றார்கள். இதுவே ஈழத்தமிழருக்கு இந்தியத் தரப்பு வழங்குகின்ற தீர்வாகும். அவர்களது உரையாடல்களும் முடிவுகளுமே தீர்வுகளாகும். அதற்காக ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் பிரதமரை சந்திப்பதற்கு முண்டியடிப்பதும், ஒருவரை ஒருவர் குழி பறிப்பதும், அதில் எத்தகைய விளைவு இருக்கிறது என்ற எண்ணத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதும், ஊடகங்களும் பதில் கேள்வி கேட்காது அவர்கள் குறிப்பிடுவதையே முழுமையாக பிரசுரிப்பதும் அரசியலாகவே காணப்படுகிறது. இதுவே ஈழத்தமிழரின் அரசியல் இருப்பின் நிதர்சனமான வடிவமாக அமைகிறது.
எனவே, இந்தியப் பிரதமரது வருகை அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை சாத்தியப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதன் அமுலாக்கமும் அதன் விளைவுகளும் வெறுமையானதாகவே அமையப்போகின்றது. எதிர்கால இலங்கை-இந்திய உறவு என்பது சீனாவை மையப்படுத்தியது என்பதும், சீனாவின் மீதான பதட்டத்திலேயே உடன்பாடு செய்துள்ளார்கள். இதனை காலப்போக்கில் இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும். இத்தகைய உடன்பாடுகளால் எந்த விளைவும் அடையப்போவதில்லை என்பதுவும், இலங்கையின் இராணுவ அணிவகுப்பை அச்சத்தோடு இந்திய பிரதமர் அணுக வேண்டிய துயரம் ஏற்பட்டிருக்கின்றது என்பதையும், இலங்கை பௌத்த துறவியின் கால்களில் விழுகின்ற போது இந்திய பிரதமர் புரிந்து இருக்க வேண்டும். இச்செயல் இந்திய தேசத்தை அவமதித்ததாகவே ஈழத்தமிழர்களால் உணரப்படுகிறது. இதுவே இந்திய தேசத்தின் எதிர்கால இருப்புக்கான அடிப்படையாகவும், 21ஆம் நூற்றாண்டில் பௌத்தம் அதிலும் இலங்கை தீவின் பௌத்தம் இந்தியாவை எப்படி கையாளுவது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே அத்தகைய காட்சி தென்படுகின்றது. மேலும் இந்திய பிரதமர்-ஈழத்தமிழ் தலைவர்களின் சந்திப்பு, ஈழத்தமிழர்கள் இந்தியாவையோ ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளையோ நம்பி பயணிப்பது என்பது துயரமானது என்பதை கோடிட்டு காட்டுகின்ற விடயமாகவே அமைந்திருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் இந்தியர்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் எந்த விளைவையும் எதிர்கொள்ளாதவர்களாக காணப்படுகின்றனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)