இலங்கை-இந்திய உறவு ஈழத்தமிழரை அதிகம் மையப்படுத்தி இருந்தது. குறிப்பாக வரலாற்றுக் காலம் முதல் இலங்கைத் தீவின் அமைவிடம் பொறுத்து, ஈழத்தமிழர்களின் வாழ்விடம், இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் மீது ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஏற்றவகையில் அமைந்திருந்தது. அதனால் ஈழத்தமிழர்கள் இந்திய ஆட்சியாளர்கள் படையெடுப்பதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக உள்ளனர் என்ற எண்ணத்தை தென்னிலங்கையின் முடியாட்சியாளர்கள் கருதினர். இதனப்படையிலேயே ஈழத்தமிழர்கள் மீது தென்னிலங்கை ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புகளும், படையெடுப்புகளும் நடைபெற்றதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இச்சூழலில் இருந்து இந்தியா படிப்படியாக விலகி ஈழத் தமிழர்களை கைவிட்ட நிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைத் தீவுக்கான விஜயம் உணர்த்துவதாக கலாநிதி. தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அவரது வாதங்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களால் பல தடவை உணர்த்தப்பட்ட ஒன்றாகும். ஆனாலும் அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் அதிகம் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை ஆழமாக அவதானிக்க இப்பகுதி முயலுகிறது.
முதலாவது, தயான் ஜயதிலக வடக்கு-கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய முழுபாகத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்று குறிப்பிட வேண்டும். ஈழத் தமிழர்களுடைய இருப்பு மூலோபாய ரீதியில் அமைவிடம் சார்ந்தது. அத்தகைய அமைவிடம் வடக்கு-கிழக்கு என்பதையே உணர்த்தக்கூடியது ஆகும். வடக்கு-கிழக்கு மீது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளை அமைப்பதும், ஆக்கிரமிப்பு செய்வதும் ஈழத்தமிழர்களின் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தை இல்லாமல் செய்கின்ற நோக்குடனே அதற்கான உபாயத்தையே தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் முன்னிறுத்தி கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன ஒரு தடவை குறிப்பிடும்போது, “சிங்கள மக்களே நீங்கள் எல்லைகளை நோக்கி நகரவில்லை எனில், எல்லைகள் உங்களை நோக்கி நகரும்” எனக் குறிப்பிட்டார். அதற்கு அமைவாகவே திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை நோக்கி பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்றத் தொடங்கினர். அதன் நீட்சியாகவே இராணுவ வலயங்களையும், முகாங்களையும், அதனை மையப்படுத்தி பௌத்த விகாரைகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் அமைவிடம் சார்ந்து ஈழத் தமிழர்கள் உடைய இருப்பு பலவீனம் அடைகின்ற சூழலில், இந்தியா பலவீனமான ஒரு சூழலை எதிர்கொள்ளும் என்பது தவிர்க்க முடியாதது. இலங்கைத் தீவில் இந்திய-சீன போட்டி என்பது நிரந்தரமான ஒரு அரசியல், பொருளாதார, இராணுவ போட்டியாக காணப்படுகிறது. அத்தகைய போட்டியில் தென்னிலங்கையை திருப்திப்படுத்துதலில் எந்த அரசாங்கத்தின் பங்களிப்பு அதீதமானது என இந்திய மற்றும் சீனத் தரப்புகள் மோதிக் கொள்கின்றன. ஆனால் அமைதியாகவும், அதிக இழப்புகளோடும் வியூக மையத்தில் ஈழத்தமிழர்களுடைய இருப்பு காணப்படுகிறது. அத்தகைய ஈழத் தமிழர்களின் இருப்பினூடாகவே எந்த சக்தியும் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தம் மற்றும் அதன் விளைவான பதின்மூன்றாவது சீர்திருத்தமும் அத்தகைய நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. முழுவதுமாக நிலத்தை பேணுகின்ற நோக்கமே அத்தகைய உடன்படிக்கையில் காணப்பட்டிருந்தது.
இரண்டாவது, தயான் ஜயதிலக முன்வைத்துள்ள விடயம் இந்தியப் பிரதமரின் அண்மைய விஜயம் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியது என்பதாகும். இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டே அவரது விஜயம் அமைந்திருப்பதாக குறிப்பிடுகின்றார். ஆனால் உலக வரலாற்றில் பொருளாதாரம் என்பது தனித்துவமானதாக புரிந்து கொள்ளப்பட்டாலும், அது அரசியலோடு பின்னிப்பிணைந்தது. அரசியல் பொருளாதாரம் ஆகவே உலகப் பொருளாதாரப் போக்கும் காணப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் அத்தகைய சிந்தனை ஒரு வலுவான ஒழுங்கு முறையை உலகளாவிய தேசங்களுக்கு இடையிலே ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய அரசியல் பொருளாதாரம் 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் ஆக பரிமாணம் பெற்றுவிட்டது. இலங்கைத் தீவின் மீது இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபாயம் வகுக்கப்பட்டிருப்பது என்பதை விட இலங்கைத் தீவுக்கான அரசியல் பொருளாதரத்தை அல்லது பொருளாதாரத்திற்கான அரசியலை கட்டமைப்பதில் இந்தியா ஒரு நகர்வை சாத்தியப்படுத்தி இருக்கின்றனர். இன்றைய உலக ஒழுங்கும் அத்தகைய அரசியல் பொருளாதாரத்தின் வடிவங்களுக்குள்ளாலேயே நகர்கின்றது. இந்தியாவும் அத்தகைய ஒழுங்க்குள்ளேயே தனது கொள்கைகளை வகுத்து வருகின்றது. இந்தியப் பிரதமர் இரண்டு பிரதான விடயங்களில் கவனம் கொண்டிருந்தார். அடிப்படையாக 1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பின் போது தாக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, நரேந்திர மோடி நகர்ந்து சென்ற செங்கம்பலம் இராணுவ அணிவகுப்பிலிருந்து அதிக இடைவெளியை கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி இந்திய இராணுவ புலனாய்வாளர்களும் இராணுவத்தினரும் அவ்அணி வகுப்பில் கலந்து கொண்டிருந்தனர். நரேந்திர மோடியின் கொள்கை வகுப்பில் இராணுவ ரீதியான நகர்வு எவ்வாறு உள்ளது என்பதை இது கோடிட்டு காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் இராணுவ தாக்குதல்களும் போர்களும், பொருளாதாரத்திற்கான அடிப்படை என்பதை கார்ள் மாக்சின் வரலாற்று பொருள் முதல் வாதத்தில் மட்டுமல்ல, சமகாலத்தில் உக்ரைன் மீதான அமெரிக்காவின் கரிசணையிலும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆகவே நரேந்திர மோடியின் வருகை வெறுமையாக பொருளாதாரத்தை மட்டும் இலக்காகக் கொண்டதாக உடன்பாடுகளை வைத்துக்கொண்டு மதிப்பீடு செய்ய முடியாது. மாறாக அவரது வருகையும் பாதுகாப்பு உடன்பாடும் அரசியல் பொருளாதார ரீதியான கட்டமைப்பை இலங்கையின் மீது ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து இருக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது. அது மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்ற போது இதே தயான் ஜயதிலக, ‘இந்தியாவுடனான இலங்கைத்தீவின் பொருளாதார ஒத்துழைப்பு காரணமாக வடக்கு வளரப் போகிறது எனத் தெரியப் போகிறது’ என்று குறிப்பிட்டதை நினைவு கொள்ளுதல் வேண்டும்.
மூன்றாவது, இந்தியா வழங்கிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்ததோடு வரலாற்று தவறு இழைத்து உள்ளார்கள் என குறிப்பிடுகின்றனர். இது ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தானது எனவும் தயான் ஜயதிலக தனது கருத்தில் முதன்மைப்படுத்தி இருக்கின்றார். அவர்கள் குறிப்பிடுகின்ற அம்சம் நியாயமானதாகவும் அண்மைய காலங்களில் ஈழத் தமிழ் ஆய்வாளர்களாலும் எச்சரிக்கப்பட்டதுமானதாகும். தமிழ்த் தலைவர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளார்கள். தென்னிலங்கை அரசியலை கட்டமைக்க விளைந்ததன் விளைவாகவே, இத்தகைய நெருக்கடிக்கு பின்னால் தமிழர்களுடைய இருப்பை சிதைத்ததில் தமிழ்த் தலைவர்களுக்கு அதிக பங்கு இருந்தது. அதற்கு பின்னால் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் பிரதான பங்காளிகளாக காணப்படுகின்றனர். அவர்களுடைய வழிநடத்தலின் கீழேயே தமிழ் அரசியல்வாதிகளின் இயங்கியல் 2009களுக்குப் பின்னர் காணப்பட்டது. இதனை 2010களில் இருந்து வடக்கு-கிழக்கு ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் வலியுறுத்தி வந்த போதும், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய கருத்துக்கள் எதனையும் செவிமடுக்க தயாராக இருக்கவில்லை. மீளவும் அத்தகைய நிலைக்குள்ளேயே அவர்கள் பயணிக்கின்றார்கள். இதனாலேயே புதிய அரசியல் தலைமைகளை தேடி ஈழத்தமிழ் மக்கள் செயல்படுகின்ற போக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. ஈழத்தமிழருடைய அரசியலில் எத்தகைய அறிவியல் பார்வையும் உள்வாங்க முடியாத அளவுக்கு அரசியல் தலைமைகளும் அதன் பங்கெடுப்பாளர்களும் காணப்படுகின்ற போது தயான் ஜயதிலக குறிப்பிடுவது நியாயமானதாகவே காணப்படுகிறது. ஆனால் 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒரு பகுதியாகக் கூட அமையவில்லை. மாறாக இந்தியர்களும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைமைகளுமே பிரதான காரணியாகவும் பங்காளர்களாவும் இருந்தனர். மறுபக்கத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரமும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தாத ஒரு ஆட்சி முறையே இலங்கை தீவின் ஆட்சி முறையாகும். அது பெரும் அளவுக்கு அரசியலமைப்பை உலகத்துக்கு காட்சிப்படுத்தவும் உலகத்தை கையாளவும் பயன்படுத்துகின்ற ஒரு குறியீடாக மட்டுமே கருதுகின்றது. இதுவே இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் பிரதியீடாகவும் அமைகிறது. வலதுசாரிகள் என்றாலும், இடதுசாரிகள் என்றாலும் ஒரே வடிவத்துக்குள் உட்பட்ட ஆட்சியாளர்களாகவே காணப்படுகின்றனர். இதில் தேசிய மக்கள் சக்தியும் விதிவிலக்கானது இல்லை. இலங்கையின் இடதுசாரித்தனம் பௌத்த மதத்தின் எண்ணங்களுக்குள்ளாலேயே இயங்குவதற்கு முனைகிறது. இலங்கைத் தீவின் அரசியல் என்பது பௌத்த மதத்தின் அரசியல் என்பதை விட மகாவம்சத்தின் அரசியல் எனக் குறிப்பிடுவது பொருத்தப்பாடு உடையது. அதுவே தீர்மானம் எடுக்கவும், உடன்பாடுகளை கையாளவும் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமை உடையது.
எனவே, இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழத்தமிழர்களின் வாழ்விடம் புவிசார் அரசியல் ரீதியில் மூலோபாயம் மிக்கது. அத்தகைய மையம் அல்லது அமைவிடம் பாக்குநீரிணையை எல்லையாகக் கொண்டது. ஈழத்தமிழரை பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் கைவிட்டாலும், இந்திய அரசின் தேசிய நலன் ஈழத்தமிழ் அரசியல் இருப்பை தக்க வைப்பதன் மூலமே உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் இருப்பையும் பேணிக்கொள்ள முடியும். ஆட்சியாளர்களும் ஆட்சிகளும் பலவீனமான கொள்கைகளை வகுத்தாலும், தேசமும் தேசிய அரசுகளின் கொள்கைகளும் தவிர்க்க முடியாது. அத்தகைய இலக்குகளை நோக்கி நகர வேண்டிய சூழல் ஒன்று காணப்படுகிறது. அதற்கான வாய்ப்பினை சீன-இலங்கை உறவு அதிகம் ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது. இலங்கைத் தீவின் எதிர்காலம் சீன-இந்திய போட்டியில் தங்கி உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)