அரசியல் கட்டுரைகள்

இந்திய-இலங்கை நலன்களின் சமரசமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயமும்!

‘இலங்கை-இந்திய உறவு பலமானதாக இருப்பதாக’ இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 1980கள் போன்று இன்றைய உலக ஒழுங்கு இல்லை என்பதையும்; இலங்கையின் மாற்றமும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களும் ஜே.வி.பி-க்கும் இந்தியாவுக்குமான நெருக்கத்தை தவிர்க்க முடியாததாக்கியுள்ளது என்ற கருத்தை இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கின்ற போது வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இருப்பு இந்தியாவின் புவிசார் அரசியல் ரீதியான உறவில் தங்கி இருக்கின்றது என்ற விவாதங்கள் ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் தென்னிலங்கையில் பார்வையில் இலங்கையின் பொருளாதார இருப்பு இந்தியாவில் தங்கி இருக்கின்றது என்ற எண்ணங்கள் அதிகம் பிரதிபலிப்பதாகவே புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை காணப்படுகிறது. தென்னிலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பின்பற்றியது போன்று தேசிய மக்கள் சக்தியும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பின்பற்றுவதற்கான தோற்றப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்தியாவும் தென்னாசிய நாடுகள் மத்தியில் இலங்கையுடன் பலமான உறவை கட்டமைக்கும் விதத்தில் நகர்ந்து கொள்ளுகின்ற போக்கையும் அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோபூர்வ இலங்கை விஜயத்தின் விளைவுகளைத் தேடுவதாக காணப்படுகிறது.

தாய்லாந்தில் நிகழும் பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாட்டை முடித்துக் கொண்டு, நான்காம் திகதி மாலை இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் பல்வேறுபட்ட பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதோடு, திருகோணமலை அணல் மின்நிலையம் திறந்து வைக்கப்படுவதோடு, பல்வேறு இந்திய நலத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கின்ற செய்முறையில் ஈடுபட இருப்பதாக இலங்கையின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இலங்கையின் வரலாற்றில் முக்கியமான நகரங்களில் ஒன்றான அநுராதபுரத்திற்கு விஜயம் செய்வதோடு, அங்கு பௌத்த மத வழிபாட்டிலும் ஈடுபடுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனைக் கடந்து பல்வேறு பிரதேசங்களுக்கும் இந்தியப் பிரதமர் விஜயம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவே தெரிய வருகின்றது. இந்தச் சூழலில் இந்தியப் பிரதமருடைய வருகை எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. அவற்றை விரிவாக நோக்குவது அவசியம்.

முதலாவது, இந்தியாவைப் பொறுத்தவரை தென்னாசிய நாடுகள் அல்லது தனது அயல்நாடுகள் முதன்மை என்ற கொள்கைத் திட்டத்தோடு நரேந்திர மோடி அரசாங்கம் இயங்கி வருகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கைத் தீவில் புதிய ஆட்சியாளர்கள் பதவியேற்ற பிற்பாடு, இந்தியா தனது செல்வாக்கை தொடர்ச்சியாக பேண வேண்டும் என்பதில் அதிக கவனத்தை கொண்டு இருக்கின்றனர். தவிர்க்க முடியாமல் இலங்கை இந்தியாவின் செல்வாக்கில் இருந்து விலகி விடக்கூடாது என்பதில் இந்தியா கரிசனை கொண்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே இந்தியா தொடர்ச்சியான பொருளாதார ஒத்துழைப்பையும், அரசியல் ரீதியான நெருக்கத்தையும் காட்டிக்கொள்ள முயலுகிறது. இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த போது காணப்பட்ட அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அதனையே வெளிப்படுத்துகின்றது. இலங்கைத் தீவு இந்தியாவிடம் இருந்து விலகிச் சென்றாலும், இலங்கை உடனான உறவை பலப்படுத்திக் கொள்வதில் இந்திய கரிசனை கொண்டிருப்பதையே இத்தகைய நகர்வுகள் காண்பிக்கின்றன. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ‘இலங்கைக்கு இந்தியாவுக்குமான நெருக்கம் வரலாற்றுபூர்வமான முக்கியத்துவம் வாய்ந்ததும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறவை பேணுவதும் பராமரிப்பதும் இலங்கை ஆட்சியாளர்களின் பிரதான இலக்கு’ என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். அத்தகைய ஒரு நெருக்கமான ஒரு உறவை இரு தரப்பும் பேண முயலுகின்றது. இந்திய பிரதமரது வருகையை இலங்கை அல்லது புதிய அரசாங்கம் வரப் பிரசாதமாக கருதுகிறது. அதற்கான எல்லா வகை தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இரண்டாவது, இலங்கைத் தீவின் அரசியல் மற்றும் பொருளாதார விடையங்களில் இந்தியாவின் நேரடி அவதானிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானது என இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக இராணுவ விடயங்களை தவிர்த்து ஏனைய பொருளாதார ரீதியான அம்சங்களில் அல்லது அரசியல் வரலாற்று ரீதியான அம்சங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை அதிகம் முதன்மைப்படுத்துவதாகவே இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் காணப்படுகிறது. அவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கத்தை இந்தியா கொண்டிருக்கின்ற போது, உள்நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளவும், அதில் இந்தியாவின் அரசியல் தலையிட்டை கைவிடவும் வாய்ப்பு இருப்பதாகவே இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று திட்டமிடுகின்றனர். இந்தியாவுக்கு இலங்கைத் தீவு அவசியம் என்ற அடிப்படையில் இந்தியா இயங்குகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும், இலங்கையின் பொருளாதாரத்தோடு அல்லது அரசியல் கருத்தோடு கட்டமைப்பு பலத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்திய-இலங்கை உறவை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தென்னிலங்கை கவனம் கொள்கிறது. அதனை இந்தியாவும் அனுசரித்துப்போவது போன்று தெரிகின்றது. பொருளாதார ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்குவது என்பது இலங்கை இந்தியாவோடு சேர்ந்து பயணிக்கிறது என்பதற்கான உத்தரவாதமாகவே இந்திய தரப்பு எண்ணுகின்றது. ஆகவே பரஸ்பரம் அரசியல் பொருளாதர ஒத்துழைப்போடு இருநாட்டுக்குமான உறவு நெருக்கமானதாகவும் பின்னிப்பிணைந்ததாகவும் மாறிக்கொண்டிருக்கின்றது. கலாச்சார ரீதியில் பௌத்தத்தை அங்கீகரித்திருக்கும் இரு தேசங்களும் பௌத்த மத பாரம்பரியங்களுக்கு ஊடான உறவினிலே பலப்படுத்திக் கொள்ளவும், ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றது. பௌத்தம் அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற போது அத்தகைய பௌத்தத்தை இந்திய அனுசரித்துப் போகின்ற போது சுமுகமான ஒரு உறவை இரு தேசங்களுக்கு இடையிலும் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை பலம் அடைந்துள்ளது. இது கடந்த கால ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளுடன் பொருந்தி போவதாகவே தெரிகின்றது.

மூன்றாவது, புதுடெல்லி-கொழும்பு உறவானது நெருக்கமானதாகவும்; இந்தியா-ஈழத்தமிழர் உறவு பலம் இழந்தும் காணப்பட வேண்டும் என்பது தென்னிலங்கையின் நீண்ட காலத் திட்டமாகவே காணப்படுகின்றது. காலணித்துவ விடுதலைக்கு பின்னரான இலங்கையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலப்பகுதியில் இருந்து அத்தகைய விரிசலை ஏற்படுத்துவதில் தென்னிலங் வெற்றி கண்டதோடு, ஈழத்தமிழர்-புதுடெல்லி உறவு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுந்திருக்கும் தமிழக-கச்சதீவு விவாகாரமும், மேலும் அத்தகைய சூழலை பலவீனப்படுத்துகின்ற விதத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீன்வளத்துறை அமைச்சர் பி.பி.சி-க்கு கருத்து தெரிவிக்கின்ற போது முன்வைத்த இந்திய தொடர்பான கருத்துக்கள், ஈழத்தமிழ் மீனவர்களின் நலன்களை விட ஈழத்தமிழருக்கும்-இந்தியாவுக்குமான அல்லது தமிழகத்துக்குமான உறவை பலவீனப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய உறவை சரி செய்வதற்கான உத்திகள் எதனையும் விட, மோதல்களையும் முரண்பாடுகளையும் கட்டமைப்பதாய், முன்னைய அரசாங்கங்கள் போன்று தற்போதைய புதிய அரசாங்கமும் செயல்படுகின்றது. மீனவர் விவகாரம் தொடர்பில் தமிழக சட்டசபை முதல் லோக்சபா வரையும் தி.மு.க-வின் கோஷங்கள் முதன்மையானதாக காணப்படுகிறது. இந்தியப் பிரதமரின் இலங்கை விசயத்தின் போது தமிழக தலைமைகள் அதனை அதிகம் முதன்மைப்படுத்துகின்ற போக்கை கண்டுகொள்ள முடியும். தென்னிலங்கையை பொறுத்தவரையில் ஈழத் தமிழர்கள் தமது இருப்பை பலப்படுத்தும் அல்லது உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் எத்தகைய உரையாடல்களையோ அல்லது அது சார்ந்த எண்ணங்களை கொண்டிருப்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் கொள்கிறது. பலவீனமான 13வது திருத்தத்தை கூட நரேந்திர மோடி அவர்கள் தனது வருகையின் போது முதன்மைப்படுத்த கூடாது என்ற விவாதத்தை புதிய அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன.  உள்நாட்டில் ஈழத் தமிழர்களுடைய அரசியல் இருப்பைப் பற்றி எத்தகைய உரையாடல்களையும் இந்திய தரப்பு முதன்மைப்படுத்தக் கூடாது என்பதில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்துவதில் கவனம் கொள்கின்றனர்.

நான்காவது, ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் இந்தியப் பிரதமருடனான உரையாடல் பற்றி சில தகவல்கள் குறிப்பிடப்பட்டாலும், உத்தியோபூர்வமாக சந்திப்பு பற்றி எத்தகைய செய்திகளும் வெளியாகவில்லை. அவர்கள் ஏற்கனவே இந்தியாவுடன் உரையாடலை இழந்துள்ளனர். இந்திய-ஈழத்தமிழர் உறவை முற்றாக தவிர்க்கும் அணுகுமுறையில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் தரப்புகள் காணப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிற்பாடு பல தடவை ஈழத்தமிழர் அரசியல் விடயங்கள் உரையாடுவதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்த போதெல்லாம் தென்னிலங்கையோடு சேர்ந்து தென்னிலங்கையின் நலனுக்கு இசைந்து, அவற்றை சீர்குலைத்த தமிழ அரசியல்வாதிகள் எந்த நியாயப்பாட்டையும் முன்வைக்க முடியாமல், தமிழ் மக்களுக்கு ஏமாற்றுத்தனமான ஒரு அரசியலை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஈழத்தமிழருடைய அரசியல் பிரச்சனைக்குரிய தீர்வை இத்தகைய அரசியல் தலைமைகளால் ஒருபோதும் சாத்தியப்படுத்த முடியாது என்பது இந்தியாவுடன் உறவை அடிப்படையாகக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். இலங்கைத்தீவுக்குள் ஈழத்தமிழர் உடைய அரசியல் பிரச்சனை தீர்க்க முடியாது என்ற எண்ணம் உருவான பிற்பாடு, இந்தியாவோடும் ஏனைய நாடுகளோடும் உறவை முதன்மைப்படுத்துவதன் ஊடாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். எனினும் துரதிஷ்டவசமாக அத்தகைய பொறிமுறையை உருவாக்கும் எண்ணங்களிலிருந்து இந்திய தரப்பு முற்றாகவே விலகி உள்ளது. இந்தச் சூழலை சரி செய்வதற்கு ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் எத்தகைய முன்முயற்சியும் எடுப்பதாக புலப்படவில்லை. அத்துடன் அது சாத்தியப்படுமா என்றதும் கேள்விக்குறியதாகவே அமைகிறது.

எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது இலங்கை விஜயம் இரு தரப்புக்குமான நலன் சார்ந்த உறவின் விஜயமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதிலும் தென்னிலங்கையின் புதிய அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார உறவில் மட்டுமே இந்தியாவின் கவனம் இருத்தல் வேண்டும் என்பதில் அக்கறை கொள்கிறது. முடிந்தவரை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், ஈழத்தமிழர் அரசியல் ரீதியாகவும் எவ்வகையான உரையாடலும் எழுந்து விடக்கூடாது என்பதில் தென்னிலங்கையின் போக்கு கரிசனை கொண்டுள்ளது.  அதேவேளை ஈழத்தமிழர் அரசியல் தலைமைகளின் பலவீனமும், இந்த அரசாங்கத்தின் யுக்தியுடன் இணைந்து நரேந்திர மோடியின் வருகையில், ஈழத்தமிழர் அரசியலை பலவீனப்படுத்தியுள்ளமையை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஈழத்தமிழர் அரசியலில் எத்தகைய மாற்றமும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் ஏற்படப் போவதில்லை. மாறாக இரு தேசங்களின் நலன்கள் சந்திக்கும் புள்ளியாக அவரது விஜயம் அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)