ஈழத்தமிழரின் அரசியலில் உள்நாட்டு மட்டத்தில் எழுந்த முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தோல்வியடைய பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தீர்வுக்கான முயற்சிகள் கடந்த காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. 1987வரை இலங்கைக்குள் தீர்க்க முடியுமென்ற நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து பிராந்திய அரசான இந்தியாவின் முன்முயற்சி தொடக்கப்பட்டது. இத்தகைய பரிமாணத்தை நோர்வே தலைமையிலான பேச்சுவார்த்தை இன்னொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது. அத்தகைய பரிமாணம் சர்வதேச நாடுகளின் அணுகுமுறைகளுக்கூடாகவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும் என்ற வெளியை தோற்றுவித்தது. அத்தகைய நகர்வின் ஓர் கட்டமாகவே ஜெனிவா அரங்குக்காக ஈழத்தமிழர் அரசியல் தலைமைகளின் விஜயங்களும் அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மிக அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயமும், தமிழீழ விடுதலை கழகத்தின் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பும் ஈழத்தமிழருக்கு தெளிவான வெளியுறவு கொள்கையின் அவசியப்பாடு உணரப்பட்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் ஈழத்தமிழருக்கான வெளியுறவுக்கொள்கையின் போக்கை உரையாடுவதாக அமைய உள்ளது.
ஈழத்தமிழருக்கு 2009களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வெளியுறவுக்கொள்கை அவசியமாகியிருந்தது. இதுபற்றிய சாதகமான, பாதகமான உரையாடல் தமிழ் கருத்தியல்வாதிகளிடம் நிகழ்ந்துள்ளது. அத்தகைய விவாதங்கள் அனைத்தும் தவிர்க்க முடியாது வெளியுறவுக்கொள்கை அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கி தந்துள்ளது. நடைமுறை ரீதியில் இலங்கை தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வை அடைவது என்பது நாட்டுக்குள் சாத்தியமற்றது என்பது கடந்த 70ஆண்டு கால அனுபவத்தின் தொகுப்பாக உள்ளது. எனவேதான் ஈழத்தமிழர்கள் பிராந்திய, சர்வதேச அரசுகளிடம் அரசியல் தீர்வுக்காக தங்கியிருக்கும் நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதிலொரு முக்கிய அத்தியாயமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயம் அமைகின்றது. தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள அரசியல் தரப்பினர் இதனை கடந்த தசாப்தங்களில் ஆரம்பித்திருக்க வேண்டும். எனினும் தற்போது அவர்களது எண்ணங்களை கடந்து தேவைப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகிறது. அதற்கான பிராந்திய அரசியல் சூழலும், சர்வதேச அரசியல் சூழலும் பொருத்தமான முடிவுகளை நோக்கி நகர்வதற்கு ஏற்ற வகையில் காணப்படுகிறது.
அதாவது, பனிப்போருக்கு பின்பின்னான காலப்பகுதியில் ஈழத்தமிழருக்கு எற்படுத்தியுள்ள அரசியல் வாய்ப்புக்களை விட கொரோனாவிற்கு பின்பான உலக ஒழுங்குக்கான தயார்ப்படுத்தல் ஏற்படுத்தியுள்ள அரசியல் சந்தர்ப்பங்கள் அதிக வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இத்தகைய வாய்ப்பின் திறவுகோலாக 2009 போரின் முடிவு வழிவகுத்திருந்தது. சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கின் வளர்ச்சி இந்திய-அமெரிக்கா கூட்டின் உருவாக்கம், இந்தோ-பசுபிக் உபாயம் மற்றும் குவாட்-01(அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான்), குவாட்-02(அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம்) என்பன அத்தகைய சூழலை தந்திருந்தது. அதிலும் சீனா எதிர் இந்தியா-அமெரிக்கா கூட்டு என்பது ஈழத்தமிழரின் பிரதான அரசியல் வாய்ப்புக்கான சூழலாக காணப்படுகின்றது. தென்னிலங்கை ஆட்சியாளர்களும் சீனாவுடனான நெருக்கத்தை தீவிரமாக பின்பற்றி வருகின்ற சூழலில் ஈழத்தமிழர்கள் இந்தியா சார்ந்தும், அமெரிக்கா உட்பட்ட மேற்கு சார்ந்தும் வாய்ப்புக்களுக்கான களத்தை கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.. இதனை ஆழமாக உரையாடுதல் அவசியமாகும்.
முதலாவது, தென்னிலங்கைக்கும் சீனாவுக்குமான உறவானது, சீனாவுக்கும் ஈழத்தமிழருக்குமான எதிர்முனையான வாதங்களை கொண்டதல்ல. தென்னிலங்கை எவ்வாறு சீனாவை நகர்த்திக்கொண்டு இந்தியாவையும் மேற்கையும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றதோ, அதே அணுகுமுறைக்குள் அத்தகைய சீன-தென்னிலங்கை உறவை ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் தலைகீழாக பிரயோகப்படுத்த வேண்டும். இதற்காக சீனா எதிர்ப்புவாதம் கொள்வது என்பது வாதமல்ல. அது ஒரு தந்திரோபாய அணுகுமுறை மடடுமேயாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் உலகில் உள்ள எல்லா அரசுகளும் ஏனைய அரசுகளதும், அரசியல் சமூகங்களதும் இருப்புக்கு அவசியமானதாகும். அதாவது, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கையாளுவது போன்று ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் சீனாவை முன்னிறுத்திக்கொண்டு மேற்கையும் இந்தியாவையும் பிரயோகப்படுத்துதல் அவசியமான வெளியுறவு உத்தியாக அமைதல் வேண்டும். தென்னிலங்கை சீனாவை முன்னிறுத்துவதும் ஈழத்தமிழர்கள் சீனாவை முன்னிறுத்துவதென்பதும் வேறுவேறான அர்த்தத்தில் நோக்கப்படுதல் வேண்டும்.
இரண்டாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு நாடுகளிற்கு ஈழத்தமிழர்களுடைய அரசியல் நிரந்தரமானதும் வாய்ப்பானதுமான ஓர் அரசியல் முதலீடாகும். அத்தகைய முதலீட்டை இதுவரையும் ஈழத்தமிழர் பயன்படுத்தாது இந்தியாவும் அமெரிக்காவுமே அதிகம் பயன்படுத்தியதோடு சாதகமான விளைவுகளை அவர்களே அறுவடை செய்துள்ளார்கள். ஈழத்தமிழர்கள் அத்தகைய தேசங்களின் ஒத்துழைப்பை தமதாக்கி ஓர் ஆரோக்கியமான அரசியல் சமூக இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான உரையாடல்களையோ அல்லது உபாயங்களையோ இதுவரை பயன்படுத்தவில்லை. அந்நாடுகளை பொறுத்தவரை தற்போது எழுந்துள்ள இலங்கை-சீனா உறவை தகர்ப்பதுவும் இலங்கைத்தீவு மீது தமது செல்வாக்கை பிரயோகப்படுத்தவதுமே பிரதான நோக்கமாக உள்ளது. அத்தகைய நோக்கை அடைவதற்கு அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக உள்ளனர். அத்தகைய எல்லையை கண்டறிந்து அதற்கான வெளியை திறந்து, அத்தகைய அரசுகளின் நலன்களையும் ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்களையும் ஓரிடத்தில் சந்திப்பதற்கு ஏற்ற வெளியுறவுக்கொள்கையொன்று ஈழத்தமிழருக்கு அவசியமானதாகும். இப்பிராந்தியம் மீது அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் நலன் என்பது சீனா எதிர்ப்பு வாதத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. அவர்களது பொருளாதார இராணுவ நலன்களோhடும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பிணைப்புக்கான அறிகுறியே தென் குவாட் என அழைக்கப்படும் குவாட்-02 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதன் நோக்கமாகும். மறுபக்கத்தில் சீனா மாத்திரமின்றி சீனாவுடன் ரஷ;சியாவும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது தென்சீனக்கடலிலிருந்து தெற்கு இந்துசமுத்திர கடல்பகுதி வரை இந்திய-அமெரிக்கா கூட்டு எதிர் சீன-ரஷ;சிய கூட்டு என்ற எதிர்ப்பு அலை எழுச்சியடைந்து வருகிறது. இத்தகைய சூழலின் பிரதான மையம் இந்து சமுத்திரம் ஆகும். அதில் இலங்கை தீவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மூன்றாவது, பிராந்திய அரசாகிய இந்தியா அமெரிக்காவோடு மட்டுமன்றி ஏனைய மேற்கு நாடுகளோடு இணைந்து கொண்டு சீனாவிற்கு எதிரான முறியடிப்பு போரை மேற்கொண்டு வருகிறது. ஈழத்தமிழர்கள் இந்திய தேசத்துடனான உறவை கடந்து தமது வெளியுறவை வரைபது என்பது கடினமானது. காரணம் இந்திய தேசத்தின் நலனுக்குள் இலங்கைத் தீவின் இருப்பு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதனால், ஈழத்தமிழர்களின் வெளியுறவின் முதற்படி இந்தியாவாக அமைவதோடு இந்தியாவிற்கூடாக அமெரிக்காவையும் மேற்கையும் மட்டுமன்றி, சீனாவை அணுகுவதும் பொருத்தமானதாக அமையும். அதாவது, பனிப்போர் காலத்தில் அமெரிக்கா எதிர் இந்தியா எனும் போக்கு நிலவியது. ஆனால் தற்போது இந்தியா, அமெரிக்கா, மேற்கு கூட்டு ஒரே நேர்கோட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய நேர்கோட்டில் ஈழத்தமிழருக்கான திறவுகோல் இந்தியா என்பதை நிராகரித்துவிட்டு பயணிக்க முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு என்பதற்காக ஈழத்தமிழர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவை அணுகுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். மறுபுறமாக இந்தியாவூடாக அமெரிக்காவையும் மேற்கையும் அணுகும் போது அது இலகுவான செய்முறையாக அமையும். அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளும் போது அமெரிக்காவிற்கும் மேற்குக்கும் பலமானதொரு செய்முறையாகவும் அமையும். இந்தியாவை பொறுத்தவரை ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்புரிமை இல்லாத போதும் இந்தோ-பசுபிக் உபாயத்திலும், குவாட்-01, குவாட்-02 அமைப்புக்களில் இந்தியாவை மையப்படுத்தியே அமெரிக்காவும், மேற்கும் இப்பிராந்தியத்தில் சுழலுகின்றது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். எனவே இந்தியா சார்ந்து நகர்வுகளில் முனைப்பான கவனத்தையும் முயற்சியையும் மேற்கொள்வதோடு இந்தியாவின் அணுசரணைக்கூடாக அமெரிக்காவையும், மேற்குலகையும் கையாள முனைவது ஈழத்தமிழரின் வெளியுறவுக்கான அரசியல் வெளியை இலகுவானதாக்கும்.
நான்காவது, இத்தகைய பிரதான நாடுகளோடு ஐரோப்பாவிலும் இதர கண்டங்களிலும் காணப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ள தேசங்களோடு உறவு கொள்ளுதல் என்பது பிரதானமான அம்சமாகும். குறிப்பாக அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு தமது பயணத்தில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது போல் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி. கனடா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளை புலம்பெயர்ந்தவர்களூடாகவும், அவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அமைப்புக்களூடாகவும் சாத்தியப்படுத்துதல் வேண்டும். இவ்வகை உறவானது தொடர்ச்சியானதாகவும், புரிதலை கொண்டதாகவும் கூட்டுத்தன்மை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
ஐந்தாவது, ஜெனிவாவில் ஈழத்தமிழர்களுக்காக முன்மொழியப்படும் தீர்மாhனங்களிலெல்லாம் ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளோடு ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதோடு எதிர்த்து வாக்களித்த நாடுகளோடு ஈழத்திழரின் அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கான உரையாடலை ஆரம்பித்தல் வேண்டும். இத்தகைய முயற்சி கடந்த காலத்தில் தவறவிட்ட போதிலும் எதிர்காலத்தில் கட்டாயமாக பின்பற்ற வேண்டியது ஈழத்தமிழரின் பிரதான உபாயமாகும்.
எனவே, ஈழத்தமிழர் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு காணப்படும் அரசியல் வெளியை ஜனநாயகபூர்வமான அணுகுமுறைகளுக்கூடாக நகர்த்துதல் வேண்டும். அத்தகைய நகர்வு கட்சி நலன், தனிமனித நலன் தேர்தல் வெற்றிக்கான அடைவை எண்ணிய நலன்சார்ந்நத நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளாது ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை மட்டும் அடைவதற்கான அணுகுமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது முதல் வெளிநாட்டு விஜயத்தை இந்தியா நோக்கியே மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், மற்றும் வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டு விஜயத்தின் முதல் பயணம் இந்தியாவாகவே அமையும். இதனை ஒர் பாடமாக ஈழத்தமிழர் கொள்வதோடு ஏனைய நாடுகளையும் அணுகுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்த முடியும். தனிமனித விருப்புக்களையும் கட்சிகளின் இலாபங்களையும் கைவிட்டுவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளாக இயங்கவும் உழைக்கவும் தயாராகுங்கள். உலக ஒழுங்கு குழம்பியிருகிறது. தென் இலங்கை ஆட்சியும் அத்தகைய குழப்பத்தை எததிர்கொண்டுவருகிறது. பிராந்திய அரசும் மேற்குலகமும் அத்தகைய குழப்பத்தை தமதாக்க முயலுகிறது. இது ஈழத்தமிழருக்கு வாய்ப்பான சந்தர்ப்பம். இதற்கான முதல் அடியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்குழுவும் புலம்பெயர் அமைப்புக்களும் எடுத்து வைத்துள்ளன. ஆனால் அதனை ஈழத்தமிழருக்கானதாக ஆக்குவதற்கான முனைப்புக்கள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை. அது தனிமனிதர்களையும் கட்சியின் விருப்பங்களையும் இலக்காகக் கொண்டு கட்டப்பட்டது. அதனால் அத்தகைய முயற்சிகள் கூட்டாக திட்டமிடப்பட்டு அறிவுபூர்வமாக உரையாடி முன்வைப்புக்களுடன் நகர்தத்தப்படுதல் அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
